சாவகச்சேரியில் கைதான இளைஞர்கள் வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று குற்றம் சுமத்தியுள்ள பொலிஸார், அவர்களுக்கும் பொலிஸார் சிலருக்கும் தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
தென்மராட்சியின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்கள் 7 பேர் மானிப்பாய் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்கள். சிவில் உடையில் சென்ற மானிப்பாய் பொலிஸார் இவர்களைக் கைது செய்திருந்தார்கள்.
கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேருக்கு எதிராக வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் தம்மால் பிரதானமாக தேடப்பட்டு வந்த இருவரும் கைது செய்யப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். இவர்களை விட மேலும் 9பேரைத் தேடி வருவதாகவும், அவர்கள் தலைமறைவாகி விட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டார்கள்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், வெளிநாட்டிலிருந்து பணப்பரிமாற்றல் சேவையூடாக ஒருவருக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகக் கடமையாற்றும் சில பொலிஸ் அதிகாரிகளுக்கும், கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கும் இடையில் தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களின் அலைபேசிகளை மையப்படுத்தியே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாகப் பொலிஸார் குறிப்பிட்டார்கள்.