கலைஞர் கருணாநிதி மறைந்தார்! அதிகாரபூர்வ அறிவிப்பு!

தி.மு.க. தலைவர், கலைஞர் கருணாநிதிக்கு உடல் நலம்( நோய் தோற்று) பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவருடைய கோபாலபுர வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதைத்தொடர்ந்து, ரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில், கடந்த ஜூலை மாதம் 27-ஆம் தேதி கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கருணாநிதிக்கு மருத்துவ குழு தீவிர சிகிச்சை அளித்தது.

இதனிடையே, நேற்று மாலை, மீண்டும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதனால் தொண்டர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். மருத்துமனை வெளியே பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதையடுத்து, கருணாநிதியை காப்பற்ற மருத்துவ குழு போராடி வருகிறது. இந்நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், முக அழகிரி ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். இதுதொடர்ந்து, தமிழக தலைமை செயலாளரை சந்திக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதற்காக தலைமை செயலாளரிடம் நேரம் ஒதுக்க திமுக தரப்பில் கேட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இந்நிலையில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முதலமைச்சர் இல்லத்திற்கு சென்றார். முன்னதாக மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க மு.க. ஸ்டாலின் தலைமையில் குடும்பத்தினர் முதலமைச்சரிடம் வலியுறுத்திருந்தனர். 5 முறை முதலமைச்சராக இருந்தவருக்கு உரிய கவுரவம் அளிக்கவும் கேட்டுள்ளனர். இது தொடர்பாக விவாதம் நடைபெறும் என தெரிகிறது.

இந்நிலையில் விடுமுறையில் உள்ள அனைத்து காவலர்களும் பணிக்கு திரும்புமாறும், அனைத்து மாவட்ட உயர் காவல்துறை அதிகாரிகளும் பணியில் இருக்க வேண்டும் என்றும். போதுமான அளவில் காவலர்கள் இருப்பதை உறுதி செய்துகொள்ளுமாறும் மண்டல ஐஜி க்களுக்கு டிஜிபி அதிகாரப்பூர்வாமாக உத்தரவிட்டுள்ளார்.

இன்று மாலை கலைஞரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த சில மணிநேரங்களாக உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகி வருகிறது. தீவிர சிகிச்சைக்கு பின்னும் கலைஞரின் உடல்நிலை மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளது. கலைஞரின் முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடு தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது என அறிக்கையில் தெரிவித்துள்ளதால் உச்சகட்ட பதற்றம் உருவாகியது.

இந்நிலையில், காவேரி மருத்துவமனை நிர்வாகம் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அறிவித்தது. இந்த செய்தி கேட்டு காவேரி மருத்துவமனை முன் குவிந்திருந்த தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது கொண்டு இருக்கின்றனர்…