உயர் தர பரீட்சைக்கு சென்ற மாணவிகள் விபத்தில் சிக்கி படுகாயம்

கொத்மலை – ஹரங்கல கிரிமிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் க.பொ.த உயர் தர பரீட்சைக்கு சென்ற மூன்று மாணவிகள் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெட்டபுலா ஹரங்கல பிரதான வீதியில் கிரிமிட்டி பகுதியில் இன்று காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கெட்டபுலா தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மூன்று மாணவிகள் பரீட்சை எழுதுவதற்காக ஹரங்கல பகுதியில் அமைந்துள்ள பரீட்சை மத்திய நிலையத்திற்கு முச்சக்கரவண்டியில் செல்லும் பொழுது கிரிமிட்டி பகுதியில் மேற்படி முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்த மூன்று மாணவிகளும் பரீட்சை நிலையத்திற்கு சென்று பரீட்சை எழுதிய பின்னர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவிகளில் ஒருவர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், ஏனைய இரு மாணவிகளும் வைத்தியசாலையில் தொடர்ந்தும் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.