நல்லூர் திருவிழா முடிந்ததும் தியாகி திலீபனுக்கு நினைவுத் தூபி

நல்லூர் ஆலயச் சூழலில் உள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தைப் புனிதமாகப் பேணுவதற்குச் சுற்றுக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. நல்லூர் ஆலயத் திருவிழா முடிந்ததும் நினைவுத் தூபி அமைக்கும் பணி ஆரம்பமாகும் என்று யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் இ.ஆனோல்ட் தெரிவித்தார்.

அவர் தெரிவித்தாவது-

கடந்த உள்ளுராட்ச்சி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பு சார்பாக போட்டியிடட நாம் எமது வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்போம் என கூறியிருந்தோம். நாம் சபை நடவடிக்கையை ஆரம்பித்ததும் எமது முதல் பணியாக திலீபனின் நினைவு தூபியைச் சீரமைப்பது என்று தீர்மானித்தோம். அதற்கான நடவடிக்கைகளை தற்போது ஆரம்பித்துள்ளோம்.

நல்லூர் ஆலயத் திருவிழா ஆரம்பிக்கவுள்ளது. அந்தப் பகுதியில் பெருமளவான மக்கள் கூடுவர். நினைவிடத்தின் புனிதத் தன்மையைப் பேணச் சுற்றுவேலி அமைத்துள்ளோம். தூபி சீரமைப்பதற்கு மாநகர சபையின் நிதி பயன்படுத்தப்படாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நினைவுத் தூபி அமைப்பதற்காக 2 லட்சம் ரூபா ஒதுக்கியுள்ளார். அந்த நிதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெறும்.- என்றார்.