பலாப்பழத்தால் சிறிலங்காப் பெண்ணுக்கு அடித்த யோகம்..

கொரிய நாட்டில் நடைபெற்ற உலக பெண்கள் மற்றும் புதிய முயற்சி போட்டியில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தயாரித்த புதிய வகை குளிர்களி (Ice Cream) மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

தெஹிஓவிட்ட அட்டுலுகம பிரதேசத்தை சேர்ந்த கே.டீ.பிரியந்தி மல்லிக்கா என்ற பெண் தயாரித்த குளிர்களிக்கே இவ்வாறு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.

இவர் தயாரித்த குளிர்களி பலாப்பழத்தில் செய்யப்பட்டிருந்ததனால் இதுவரை காணாத ஒரு படைப்பாக நடுவர்கள் வியந்து பாராட்டியுள்ளனர்.

இதன்மூலம் குறித்த பெண் புதுவகை உணவுத் தயாரிப்பு என்ற வகையில் உலகின் முக்கிய சமயல் போட்டிகளுக்குச் செல்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று சுட்டிக்காடியுள்ளது.

இதுகுறித்து மல்லிக்கா கூறுகையில்,

”48 கோடி பலா மர பயிர் செய்கை ஒவ்வோர் ஆண்டும் எம் நாட்டில் மேற்கொள்ளப்படுகின்றது. அதில் 11 கோடி பலாப்பழங்கள் மாத்திரமே பயன்பாட்டிற்கு பெற்றுகொள்ளப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் சுவையான மற்றும் இயற்கையான உணவான பலாவில் புதிதாக ஒன்றை செய்யத் திட்டமிட்டதன் விளைவே இந்த ஐஸ்கிறீம். மிகுந்த இனிப்புச் சுவைகொண்ட இந்த ஐஸ்கிறீம் பலரையும் கவர்ந்துவிட்டது. ஆதலால் இந்த முயற்சினை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் பலருக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க முடியும் என நம்புகிறேன். கஸ்டப்பட்ட குடும்பப் பின்னணியைக்கொண்ட நான் மிகவும் பாடுபட்டே இந்த நிலைக்கு முன்னேறியுள்ளேன்” என்றார் பிரியந்தி மல்லிக்கா.