வீதி விபத்துத் தொடர்பில், முதலமைச்சரும், அதிகாரிகளும் அடிமட்டத்துக்கு இறங்கி அர்ப்பணிப்போடு சேவை செய்ய முயற்சி செய்யுங்கள். இல்லையேல் இன்னும் எத்தனையோ எமது உறவுகளை இழக்கவேண்டிவரும்.
முடியா விட்டால் அமைச்சுப் பொறுப்பைத் தரவேண்டாம், தயவு செய்து ஒரு அனுமதியைத் தாருங்கள் இரவுபகலாக நின்று வேலை செய்து தருகிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார், நீதிமன்றால் வடக்கு மாகாண அமைச்சர் என்று அறிவிக்கப்பட்டுள்ள பா.டெனீஸ்வரன்.அவர் அனுப்பிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு மாகாணத்தை வீதி விபத்துக்கள் அற்ற மாகாணமாக மாற்றவேண்டும்.
எமது போக்குவரத்துச் சேவையை ஏனைய மாகாணங்கள் திரும்பிப் பார்க்க வேண்டும், அதனைப் பார்த்து ஏனையவர்கள் பின்பற்ற வேண்டும் என்பது எனது இலட்சியங்களில் ஒன்று.
இதற்காக இரவுபகலாக பாடுபட்டு நியதிச்சட்டம் உருவாக்கி அதன் ஊடாக போக்குவரத்து அதிகார சபையை உருவாக்கி இருந்தேன். பிழை செய்வோருக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கு அந்தச் சட்டத்தில் இடமிருக்கின்றது.
பல்வேறு வேலைத்திட்டங்கள் செய்து வைத்திருந்தேன். அவையனைத்தும் தற்போது முதலமைச்சரின் கைகளில் உள்ளன. அனைத்தும் வெறுமனே கிடப்பில் போடப்பட்டுள்ளன. எம்மில் சிலர் தானும் செய்ய மாட்டார்கள் செய்பவர்களையும் செய்ய விடமாட்டார்கள்.
இது எமது இனத்தின் சாபக்கேடு. வீதி விபத்தால் இன்று எமது மாகாணத்தில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மூலையில் ஒரு உயிரை இழந்து கொண்டு இருக்கின்றோம். இதைப் பார்த்துக்கொண்டு இப்படியே இருக்கப் போகிறோமா? சாரதிகளின் கவனக்குறைவு என்று காரணம் கூறப்போகின்றோமா? தங்கள் பிள்ளை களையும் உறவுகளையும் இழந்து பரிதவிக்கும் குடும்பங்க ளின் வேதனையை உங்களால் உணரமுடியவில்லையா?
2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் உயிரிழந்த 5 வயது சுவஸ்திகன் என்ற மாணவனின் சாவு இன்னும் என்மனதில் ஆறாத வலியாகப் பதிந்துள்ளது. தயவு செய்து சிந்தித்துச் செயற்படுங்கள் – என்றுள்ளது.