மர்மமான முறையில் இறந்த தமிழ்ப் பெண்

இரண்டு பிள்ளைகளின் தாயான இளம் பெண்ணொருவர் இன்று அதிகாலை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி வந்துரம்ப பிரதேசத்தில் பிலகொடவத்தை, கொகாவல குருமினி பங்களாவ என்ற முகவரியில் எம். விஜயலக்ஷ்மி என்ற இந்த 24 வயதான பெண்ணும் அவரது கணவர், கணவரின் சகோதரர், சகோதரின் மனைவி ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.

மரண தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பெண்ணின் கணவர் கே. சிங்காரவேலு, அவரது சகோதரர், சகோதரரின் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக வந்துரம்ப பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் பிலகொட தோட்டத்தில் கொகாவல பிரிவில் தொழில் புரிந்து வந்துள்ளனர். உயிரிழந்த பெண்ணுக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதுடன் பிள்ளைகள் பெண்ணின் தாயிடம் வளர்ந்து வருகின்றன.

நேற்று மாலை இவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளதுடன் பெண்ணும் அவரது கணவரும் சம்பளத்தை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளனர்.

வீட்டுக்கு வந்த மனைவி அதிகாலையில் எழுந்திருக்கவில்லை என்பதுடன் அவரது கையில் காயம் இருந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று இரவு அதிகமாக மது அருந்தி உள்ளதுடன் கைது செய்யப்படும் போதும் போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து வந்துரம்ப பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.