அனாதையாக திரிந்த மகனை 9 ஆண்டுகளுக்கு பிறகு மீட்டு இலங்கைக்கு அழைத்து வந்த தந்தை!!

இந்தியாவின் சுற்றுலா வந்த இடத்தில் காணாமல் போன மகனை 9 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்டெடுத்து இலங்கை நாட்டிற்கு அழைத்து சென்று பாசப்போராட்டத்தில் வென்றுள்ளார்.

இலங்கையை சேர்ந்த சத்தியவான்(74) என்பவர் தேயிலை தோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் சுதர்சன் (31) என்பவர் 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து பெங்களூருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

ஆனால், விசாக்காலம் முடிந்த பின்னரும் இவர் இலங்கை நாட்டிற்கு திரும்பவில்லை. இதனால் தனது மகனை தேடுவதற்காக இந்தியா வந்த தந்தை, இந்திய தூதரகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் மகனை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றத்துடன் மீண்டும் இலங்கைக்கு சென்றார்.

இந்நிலையில், கடந்த 2003 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்கள் அதிகளவு வசிக்கும் நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு சத்தியவான் சென்றுள்ளார்.

அங்கு, பந்தலூர் பேருந்து நிலையத்தில் மனநலம் பாதித்த நிலையில் தனது மகன் சுதர்சன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் மகனுக்கு புதிய ஆடைகள் வாங்கி கொடுத்த சத்தியவான், மனநலம் பாதித்த மகனுக்கு சிகிச்சை அளிக்க கேரளாவுக்கு அழைத்து சென்றார்.

அங்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது, பின்னர் இலங்கைக்கு மகனை அழைத்து செல்ல சத்தியவான் முயற்சிகளை மேற்கொண்டார்.

ஆனால், சுதர்சன் சட்டவிரோதமாக தங்கியருந்த காரணத்தால் இதுதொடபான விசாரணைகளை முடிக்க வேண்டியிருந்த காரணத்தால் உறவினர் வீட்டில் மகனை விட்டு இலங்கை சென்றார்.

கடந்த மாதம் இலங்கையில் இருந்து சத்தியவான் மீண்டும் தேவாலா வந்தார். பின்னர் ஏ.ஐ.டி.யூ.சி. கட்சி மாவட்ட தலைவர் டி.பாலகிருஷ்ணனை சந்தித்து முறையிட்டார்.

இதுகுறித்து மறுவாழ்வுத்துறை இயக்குனர் தினேஷ் பொன்ராஜ் ஒலிவர் ஐருளு கவனத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் கொண்டு சென்றது.

மேலும் மறுவாழ்வுத்துறை இயக்குனரிடம் தனது மகனை இலங்கைக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கும்படி சத்தியவான் கோரிக்கை மனு அளித்தார்.

இதைத்தொடர்ந்து சுதர்சன் இலங்கை செல்வதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து பொலிசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அனுமதி இன்றி இந்தியாவில் இவ்வளவு நாட்கள் இருந்ததற்காக சுதர்சனுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகையை சுதர்சன் தந்தை சத்தியவான் உடனடியாக செலுத்தினார். பின்னர் தூதரகம் மூலம் சுதர்சனுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த சத்தியவான் 9 ஆண்டுகளுக்கு பிறகு தனது மகன் சுதர்சனை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நேற்று முன்தினம் மாலை அழைத்து சென்றார்.

போராடி தனது மகனை மீட்டெடுத்த ஒரு தந்தையின் பாசப்போராட்டம் அனைவரையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.