கால்வாயில்- தொப்புள் கொடியுடன் மீட்கப்பட்ட ஆண் சிசு!!

இந்தியா சென்னை வலசரவாக்கத்தில், குடியிருப்பு பகுதிக்கு அருகில் இருக்கும் கழிவுநீர் கால்வாயில் சிசுவொன்று தொப்புள் கொடியோடு மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

சென்னை வலசரவாக்கத்தை சேர்ந்த கீதா என்பவர், தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கழிவுநீர் கால்வாயில் இருந்து குழந்தையில் அழுகுரலைக் கேட்டுள்ளார். பின்னர் கால்வாயில் இருந்த தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் ஆண் குழந்தை ஒன்றை மீட்டுள்ளார்.

அருகில் இருந்துவர்களின் உதவியோடு குழந்தையின் உயிரை காப்பாற்றிய கீதா அக்குழுந்தைக்கு சுதந்திரம் என பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் குழந்தையை மீட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் குழந்தையின் பெற்றோர் குறித்த தகவல்களை விசாரித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கால்வாயில் இருந்து குழந்தை மீட்கப்பட்டது முதல், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் வரை வீடியோவாக அப்பகுதி மக்கள் படம் பிடித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.