நாயாற்றிலிருந்து தெற்கு மீனவர்கள் வெளியேறினர்! – முறுகலைத் தடுக்க தயார் நிலையில் பொலிஸார்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாற்றில் தங்கியிருந்து தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்த தென்னிலங்கை மீனவர்கள், பொலிஸ் பாதுகாப்புடன் இன்று (16) மாலை அங்கிருந்து வெளியேறினர்.

கடந்த திங்கட்கிழமை இரவு, நாயாற்றில் தமிழ் மீனவர்களின் 8 வாடிகள் எரியூட்டப்பட்டிருந்தன. அங்கு தங்கியிருந் தென்னிலங்கை மீனவர்கள் மீது தமிழ் மீனவர்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தமிழ் – சிங்கள இனரீதியான மோதலாக மாறும் சூழல் ஏற்பட்டிருந்தது.

இந்தநிலையில், நாயாற்றிலிருந்து தென்னிலங்கை மீனவர்கள் நேற்று மாலை தமது பொருள்களை மூட்டை முடிச்சாகக் கட்டிக் கொண்டு, படகுகளையும் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து வெளியேறினர். அப்போது இரு தரப்பினரிடையேயும் முரண்பாடு ஏற்படும் சூழல் காணப்பட்டது. அதனால் ஆயுதம் தாங்கிய பெருமளவு பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.