பாடகர் அடித்துக் கொலை!!

மேடைப் பாடகரை அவருடைய மகன் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் வேலூர் மாவட்டம், வாலாஜா தென்றல் நகரில் நடந்துள்ளது. வாடகை வீட்டில் வசித்து வந்தவர் அசோக்குமார் (வயது 50), மேடை பாடகரான இவர் பாட்டு கச்சேரிகள் நடத்துவதோடு, அதே பகுதியில் பாடல் மற்றும் இசை கற்றுக்கொடுக்கும் வகுப்பும் நடத்தி வந்தார்.

இவருடைய மனைவி தனுஜாகுமாரி (43) ஆசிரியை. அசோக்குமாருக்கும், தனுஜாகுமாரிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அன்றைய தினமும் அசோக்குமார், தனுஜாகுமாரி மற்றும் மகன்களை இழிவாக பேசி அடித்ததாகக்கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த மகன் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் தந்தை அசோக்குமாரை தாக்கினார். இதில் அசோக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி தகவலறிந்ததும் ராணிப்பேட்டை மற்றும் வாலாஜா பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் அசோக்குமார் உடலை கைப்பற்றி சடலப் பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மகனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.