மனைவியின் துணையுடன் மாணவிகளை சீரழித்த தனியார் கல்வி நிலைய நிர்வாகி விளக்கமறியலில்!

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் மாணவிகள் சிலரை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய குற்றச்சாட்டில், அந்த கல்வி நிலையத்தின் நிர்வாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தர்மபுரத்திலுள்ள விடியல் கல்வி நிலையத்தின் நிர்வாகி, தனது மனைவியின் துணையுடன் மாணவிகள் சிலரை பாலியல் தொந்தரவு மற்றும் துஷ்பிரயோக முயற்சி செய்தார் என கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் தர்மபுரம் பொலிசாரால், குறித்த நிர்வாகி நேற்று (17) முன்னிலைப்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த பதில் நீதவான் சிவபாலன் எதிர்வரும் 30 .08 .2018 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்

விடியல் கல்வி நிலையத்தில் கல்விகற்க வருகின்ற மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு பலமுறை இடம்பெற்று வந்துள்ளது என குற்றம் சுமத்தப்படுகிறது. இந்த வருட ஆரம்பத்தில் இப்படியொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கல்வி நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது. எனினும், குற்றச்சாட்டு குறித்து யாரும் பொலிஸ் முறைப்பாடு செய்யவில்லை.

இந்தநிலையில், இம்முறை குற்றச்சாட்டு கிளம்பியதையடுத்து கண்டாவளை பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலார், கண்டாவளை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோரின் முயற்சியில் தர்மபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதனை அடுத்து நிர்வாகி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.