வதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்!! – கிளிநொச்சியில் சம்பவம்!

அலுவலக முற்றம் கூட்டடினால் மாத்திரமே வதிவிடத்தை உறுதிப்படுத்த முடியும் என கிராம அலுவலர் அறிவித்தலுக்கு அமைய குழந்தையுடன் சென்ற பெண் முற்றத்தை கூட்டிய பின் தனது வதிவிடத்தை உறுதிப்படுத்திச் சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுகிளிநொச்சி திருநகர் தெற்கு கிராமத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது வதிவிடத்தை உறுதிப்படுத்துவதற்காக கிராம அலுவலரிடம் முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு பிடித்துக்கொணடு குழந்தையுடன் சென்றுள்ளார்.

கடமையில் இருந்த கிராம அலுவலா் குறித்த பெண்னிடம் தனது அலுவலக முற்றத்தை கூட்டுமாறும் அதன் பின்னரை வதிவிடத்தை உறுதிப்படுத்தி ஒப்பம் இடுவேன் என அதிகாரத்துடன் தெரிவித்துள்ளார்.

இதன் போது குறித்த பெண் தனக்கு வீசிங் நோய் இருக்கிறது என பதிலளித்துள்ளார் அப்போது முற்றம் கூட்டினாள்தான் உறுதிப்படுத்துவேன் என கிராம அலுவலர் கண்டிப்பாக தெரிவிக்க வேறு வழியின்றி குழந்தையையும், வாடகைக்கு பிடித்துச்சென்ற முச்சக்கர வண்டியையும் காத்திருக்க வைத்து விட்டு முற்றத்தை கூட்டிய பின்னர் கிராம அலுவலரிடம் கூட்டிவிட்டதாக தெரிவித்து தனது வதிவிடத்தை உறுதிப்படுத்தி சென்றுள்ளார்

குறித்த சம்பவம் மக்களிடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராம அலுவலர் தான் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு குழந்தையுடன் வதிவிடத்தை உறுதிப்படுத்த வந்த பெண்ணை இவ்வாறு நடத்தியது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் கரைச்சி பிரதேச செயலாளரிடம் எழுத்து மூலம் முறைப்பாடு ஒன்றை வழங்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் எழுத்து மூலமான முறைப்பாடு கிடைத்துள்ளதனை கரைச்சி பிரதேச செயலாளரும் உறுத்திப்படுத்தினார்.