யாழில் அவா குழுவினர் வீடுகளில் புகுந்து அட்டகாசம் செய்த 9 பேர் கொண்ட புதிய குழு!!

யாழ்ப்பாணம் கொக்குவில், இணுவில் மற்றும் தாவடி ஆகிய இடங்களில் 3 வீடுகள், தேனீர் கடை, கராஜ் ஆகிய இடங்களில் புகுந்த 9 பேர் கொண்ட கும்பலொன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.

ஆவா கும்பலுக்கு அச்சுறுத்தும் வகையில் துண்டறிக்கையை வழங்கிய கும்பல், தமது அட்டூழியங்களை வீடியோ அழைப்பில் நேரலையாக ஒருவருக்கு காண்பித்துள்ளது.

இந்தச் சம்பவங்கள் இன்று புதன்கிழமை மாலை 3.45 மணி தொடக்கம் 4.30 மணிக்குள் 45 நிமிடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“இலக்கத்தகடுகள் அற்ற 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பலே இந்த அட்டூழியங்களில் ஈடுபட்டது. கும்பலிடம் இருந்த வாள்கள் பளிச் என்று தெரிந்தன. அவை மிகப் பெரியளவில் இருந்தன.

வந்தவர்களில் ஒருவர் தனது அலைபேசியின் ஊடாக வீடியோ அழைப்பை ஒருவருக்கு எடுத்து தமது அடாவடிகளை நேரலையாகக் காண்பித்தார்” என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

“யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி லேன் மற்றும் ரயில் நிலையத்தடியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த கும்பல், அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளது.

உடமைகளைச் சேதப்படுத்திவிட்டு தப்பித்துள்ளது. அந்த இரண்டு வீடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள். அவர்களை அச்சுறுத்தும் வகையிலேயே இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், இணுவில் சந்திக்கு அண்மையாகவுள்ள தேனீ்ர் கடை மற்றும் கராஜ் என்பன தாக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து தாவடி பாடசாலை லேனில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் கும்பல் செயற்பட்டது.

இணுவில் மற்றும் தாவடிப் பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் ஆவா குழுவைச் சேர்ந்தவர்களின் உறவினர்களுடைய உடமைகள்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவங்கள் இடங்கள் சுன்னாகம், கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுகளுக்குள் வருகின்றன. அதனால் மூன்று பொலிஸ் நிலையங்களும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.