அம்பகாம சண்டையில் புலிகள் ஏன் தோற்றனர்?: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? – 09

பீஷ்மர்

அம்பகாமம் களமுனையில் புலிகள் நடத்திய ஊடறுப்பு தாக்குதலில் சாள்ஸ் அன்ரனி தூய தமிழில் கட்டளைகள் வழங்கிக் கொண்டிருந்தார் என்பதையும், அதை கேட்டுக் கொண்டிருந்த பிரபாகரனிற்கு எரிச்சல் வந்ததென்பதை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

அம்பகாம தாக்குதல் புலிகளிற்கு கிட்டத்தட்ட வாழ்வா சாவா தாக்குதல்தான்.. ஏனெனில், 2006 இன் பின்னர் புலிகளால் குறிப்பிடத்தக்க வலிந்த தாக்குதல் எதனையும் செய்ய முடியவில்லை. சம்பூரில், முகமாலையில் செய்த தாக்குதல்கள் வெற்றியளிக்கவில்லை. அதன் பின்னர் வன்னியில் குறிப்பிடத்தக்கதாக தாக்குதல் எதையும் செய்ய முடியவில்லை.

அதற்கு காரணம், இராணுவத்தின் இடைவிடாத நகர்வு. புலிகள் ஆசுவாசப்பட, சுதாகரிக்க, ஒன்றுதிரள அவகாசம் கொடுப்பதில்லையென்பதில் இராணுவம் குறியாக இருந்தது. இதுதான் நான்காம் ஈழ யுத்தத்தில் இராணுவத்தின் அடிப்படையான போருத்தி.

வன்னியை நாலா பக்கத்திலும் வளைத்து அவகாசமே இல்லாமல் போரிட்டு புலிகளை களைப்படைய செய்தது. இதனை புலிகளால் எதிர்கொள்ள முடியவில்லை. நிலப்பரப்பு பெரியதாக இருந்தபோது அணிகளை ஒருங்கிணைத்து தாக்குதல் நடத்த அவர்களால் முடியவில்லை. வன்னியின் பெரும்பகுதியை கைப்பற்றி, புலிகளை விசுவமடு தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை நெருக்கிய பின்னர் புலிகள் மேற்கொண்ட வலிந்த தாக்குதல் இது. இதில் வெற்றியடைய வேண்டுமென புலிகள் விரும்பினார்கள். ஏனெனில் வாழ்வா சாவா நிலையை அப்பொழுதே உணரத் தொடங்கிவிட்டார்கள். தொடர்ந்து பின்வாங்கி சென்றால், மீளவே முடியாத பொறிக்குள் சிக்கிவிடுவோமென்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

சூட்டுவலுவை பெருக்க, ஒவ்வொரு மூவரை கொண்ட கொமாண்டோ செக்சனில் ஒரு எல்.எம்.ஜி இயந்திர துப்பாக்கியை இராணுவம் இணைத்தது
சூட்டுவலுவை பெருக்க, ஒவ்வொரு மூவரை கொண்ட கொமாண்டோ செக்சனில் ஒரு எல்.எம்.ஜி இயந்திர துப்பாக்கியை இராணுவம் இணைத்தது

விடுதலைப்புலிகளுடனான அதுவரையான போரியல் அனுபவங்களை திரட்டி, நான்காம் ஈழப்போரில் இராணுவம் புதிய போருத்திகளை பயன்படுத்த ஆரம்பித்திருந்தது. புலிகள் வலிந்த தாக்குதல் நடத்தினால் தற்காலிகமாக அரண்களை பின்நகர்த்துவது, புலிகளை உள்ளே வரவிட்டு பெட்டி (BOX) அடிப்பது போன்ற பல உத்திகளை கையாண்டு கொண்டிருந்தனர். ஜெயசிக்குறுவில் முன்னேறி வந்த படையினரை ஓயாத அலைகள் மூன்றில் ஒரேயடியாக விரட்டியதை போன்ற ஒரு சந்தர்ப்பத்திற்காக புலிகள் காத்திருந்தனர். ஆனால், இனி அப்படியான சந்தர்ப்பத்தை கொடுத்துவிடக் கூடாதென்பதில் இராணுவம் குறியாக இருந்தது.

ஜெயசிக்குறு காலத்தில் விட்ட தவறு கைப்பற்றிய பிரதேசத்தை வெறும் கோதாக- முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் முன்னரணை மாத்திரம் பலப்படுத்தி வைத்திருந்தது. முன்னரணை தகர்த்தால் சரி. உள்ளே ஓட்டை. அதுதவிர, ஆயுதக்களஞ்சியங்களையும் முன்னரணிற்கு நெருக்கமான பேணினார்கள். களஞ்சியத்தை அழிக்க அல்லது கைப்பற்றவும் புலிகளிற்கு வாய்ப்பாக இருந்தது. நான்காம் கட்ட போரில் இவற்றையெல்லாம் இராணுவம் மாற்றியது.

அம்பகாமத்தில் புலிகள் தாக்கத் தொடங்கிய போது இராணுவம் மூர்க்கமாக எதிர்த்து போரிடவில்லை. சிலபகுதி முன்னரண்களிலிருந்து அணிகளை பின்னகர்த்தியது. நான்காம் ஈழப்போரில் புலிகள் இராணுவத்தை அதிகம் பின்னகர்த்திய தாக்குதல்களில் இதுவும் ஒன்று. ஆனால் இதில் இராணுவம் பின்னகர்ந்ததும் ஒரு தந்திரோபாய நகர்வே.

குடாரப்பு தரையிறக்க அணிகள் இத்தாவிலில் நிலைகொண்டிருந்தபோது, ஆனையிறவு நீரேரியூடாக அந்த அணிகளிற்கான 120எம்.எம். மோட்டாரை கொண்டு செல்லும் பெண் புலிகள்
குடாரப்பு தரையிறக்க அணிகள் இத்தாவிலில் நிலைகொண்டிருந்தபோது, ஆனையிறவு நீரேரியூடாக அந்த அணிகளிற்கான 120எம்.எம். மோட்டாரை கொண்டு செல்லும் பெண் புலிகள்

அது மழைக்காலம். நினைத்ததைபோல புலிகளால் தாக்குதல் நடத்த முடியவில்லை. ஆட்லறிகளை நினைத்த வேகத்தில் நகர்த்த முடியவில்லை. காட்டிற்குள் உருவாக்கப்பட்ட பாதையில் சப்ளை வாகனங்கள் ஆங்காங்கு புதையத் தொடங்கிவிட்டன. காலநிலையும் புலிகளிற்கு எதிராக நின்றது. பொதுவாகவே புலிகள் வலிந்த தாக்குதல் ஒன்றை செய்வதென்றால் ஆறு மாதத்திற்கு முன்னரே நன்றாக திட்டமிடுவார்கள். அந்த தாக்குதல் இலக்கிற்கு செல்லும் வீதிகளை செப்பனிட்டு, பாலங்களை சரி செய்வார்கள். ஆட்லறி, ராங்கியென கனரக ஆயுதங்களை புலிகள் பெற்ற பின்னர், இப்படியான ஏற்பாடுகளை கச்சிதமாக செய்ய வேண்டியிருந்தது. மூன்றாம் ஈழப்போரில் நடந்த தாக்குதல்கள் அனைத்தையும் இப்படித்தான் புலிகள் திட்டமிட்டனர்.

அம்பகாம சண்டையில் புலிகள் தோல்வியடைந்ததற்கு முறையான திட்டமிடலின்மையும் முக்கிய காரணங்களில் ஒன்று. புலிகளின் வழக்கமான தாக்குதல்களின்போது, தாக்குதலிற்கு பல மணித்தியாலங்கள் முன்னரே ஆட்லறிகளை தேவையான நிலைகளிற்கு நகர்த்திவிடுவார்கள். ஆனால் அம்பகாம தாக்குதலில் முன்னரணில் சண்டை தொடங்கும்வரை சில இடங்களிற்கு ஆட்லறி மோட்டார்கள் சென்றுசேரவேயில்லை. மழை, சகதி காரணமாக புதைந்து, அவற்றை எடுப்பதில் பெரும் பிரயனப்பட வேண்டியிருந்தது. சண்டையொரு பக்கம், புதைத்த ஆட்லறிகளை இழுத்தெடுப்பது இன்னொரு பக்கமென பெரும் திண்டாட்டம் ஏற்பட்டது.

வன்னிக்கான ஆயுத மார்க்கங்கள் முடங்கியதன் பின்னர் விடுதலைப்புலிகளின் எறிகணை இருப்பு பெருமளவு தீர்ந்து போய்விட்டது. ஓயாத அலைகள் ஒன்றில் முல்லைத்தீவு கைப்பற்றிய தாக்குதலிலிருந்து பின்னால் நடந்த எல்லா தாக்குதல்களிலும் புலிகளின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று எறிகணை. தாராளம் மற்றும் துல்லியம்தான் புலிகளின் ஆட்லறி பிரிவின் வெற்றி இரகசியம். துல்லியமாகவும் தாராளமாகவும் எறிகணைகளை ஏவினால் எதிரிகள் நிலைகுலைந்து போய்விடுவார்கள். ஆனால் கடல் மார்க்க ஆயுத விநியோகம் தடுக்கப்பட்டதன் பின் துல்லியம் மட்டுமிருந்ததே தவிர தாராளம் இல்லாமல் போனது. கையிருப்பிலிருந்த எறிகணைகளை மருந்து பாவிப்பதை போலத்தான் பாவிக்க வேண்டியிருந்தது.

அம்பகாமத்தில் தாக்குதல் மேற்கொண்டபோது தாராள எறிகணை பாவனை புலிகளிடம் இருக்கவில்லை. அதுதவிர்ந்த நேரடி சமரில் சூட்டுவலுவில் இராணுவம்தான் மேலோங்கியிருந்தது. நான்காம் கட்ட ஈழப்போரில் இராணுவம் பாவித்த அடுத்த போருத்தி இது. புலிகளை விட சூட்டுவலுவில் மேலோங்க வேண்டுமென்பது. ஆகவே, அம்பகாம தாக்குதலை இராணுவம் சுலபமாக கையாண்டது. ஆரம்பத்தில் சில பகுதி அணிகளை பின்நகர்த்தி, இன்னொரு பகுதியில் விடுதலைப்புலிகளின் அணியொன்றை முற்றுகையிட்டு விட்டது.

தாக்குதல் திட்டம் வெற்றியளிக்கவில்லை. முற்றுகைக்குள்ளிருந்த அணியை மீட்டு தாக்குதலை கைவிட புலிகள் முடிவு செய்தார்கள். சாள்ஸ் அன்ரனி கட்டளை மையத்தில் உட்கார்ந்திருந்து தூய தமிழில் கட்டளைகளை வழங்கினார். அது தமிழிற்கு நல்லதே தவிர களத்திற்கு நல்லதல்ல.

இவற்றை அவதானித்துக் கொண்டிருந்த பிரபாகரன் உடனடியாக கட்டளை மையத்தில் மாற்றம் செய்ய பணித்தார். பானு கட்டளை மையத்திற்கு மாற்றப்பட்டார். பானுதான் குட்டிசிறி மோட்டார் அணியை உருவாக்கி களங்களில் வெற்றிகரமாக கையாண்டவர். களத்திற்கு பின்னால் உள்ள மோட்டார்நிலைகளில் இருந்து துல்லியமாக எறிகணை ஏவுவதற்கு மோட்டார்காரர்கள் மட்டுமல்லாமல், வரைபடம் தயாரிப்பவர்கள், களத்தில் நின்று இலக்கு குறிப்பவர்கள் என பலதரப்பட்டவர்களின் கூட்டு முயற்சி மற்றும் தொழில்நுட்ப விடயம் அது. அதனை பானு சிறப்பாக உருவாக்கியிருந்தார். மூன்றாம் கட்ட ஈழப்போரில் பெரும்பாலும் அவர் மோட்டார் அணிகளைத்தான் வழிநடத்தினார்.
பிரபாகரனின் உத்தரவையடுத்து, சாள்ஸ் அன்ரனிக்கு பதிலாக பானு கட்டளையிடும் அதிகாரியானார்.

தளபதிகள் ரமேஷ், ஜெயம், சூசை
தளபதிகள் ரமேஷ், ஜெயம், சூசை

இந்த தாக்குதலில் பகுதி பொறுப்பாளர்களாக ஜெயம், கீர்த்தி, வசந்தன், லோறன்ஸ் உள்ளிட்ட பலர் பங்காற்றினார்கள். இறக்கும்வரை சாள்ஸ் அன்ரனியிடம் களத்தை வழிநடத்த முடியாத பலவீனம் இருந்தது. பின்னாளில் நடந்த கேப்பாப்பிலவு, தேவிபுர சண்டைகளிலும் சாள்ஸ் அன்ரனி நிறைய தடுமாறி, அந்த தாக்குதல்களும் எந்த பலனையும் கொடுக்கவில்லை. (அதைப்பற்றி பின்னர் விபரமாக குறிப்பிடுவோம்) ஆனால், அதனை புலிகள் கணக்கில் கொள்ளவில்லை. இறுதிவரை அவர்தான் முடிவெடுப்பவராகவும், களங்களை திட்டமிடுபவராகவும் இருந்தார். சடுதியான தோல்விகளிற்கு இதுவும் காரணம்.

போரிடும் திறன் குறைந்த புதிய போராளிகள், போதிய ஆயுததளபாடங்கள் இன்மை, முறையான திட்டமிடல் வழிகாட்டல் இல்லையென எல்லாமும் சேர புலிகளின் வீழ்ச்சி சடுதியானது. அப்படியெடுக்கப்பட்ட சில முடிவுகள் மூத்ததளபதிகள் பலருக்கு பிடிக்காமலும் இருந்தது. ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதுபோல மூத்த தளபதிகள் வைத்த யோசனைகள் ஏற்றும்கொள்ளப்படவில்லை. அப்படிப்பட்ட இரண்டு சம்பவங்களை குறிப்பிட வேண்டும்.

அந்த யோசனையை வைத்த தளபதிகள் பால்ராஜ், தீபன்.

அவர்கள் வைத்த யோசனை என்ன?

(தொடரும்)

நன்றி : தமிழ் பக்கம்