இலங்கையில் ஒரு சில மணித்தியாலங்களில் 10 பேர் பலி!

இலங்கைக கடந்த சில மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

கல்குடா, மீரிகம, கொச்சிகடே, கெகிராவ, கொடகஹவெல, மஹவ, மின்னேரியா மற்றும் கொஸ்கம பிரதேசங்களில் இவ்வாறு விபத்து நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மின்னேரியா நகரில் மகிழுந்து ஒன்று, மரம் ஒன்றில் மோதி விபத்துக்கு உள்ளானதில் இரண்டு இளைஞர்கள் பலியாகினர்.

கண்டியிலிருந்து கதுருவளை நோக்கிய பயணித்த மகிழுந்தே இன்று காலை விபத்துக்கு உள்ளாகியது.

இதேவேளை, இரத்தினபுரி – எம்பிலிப்பிடிய வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் பயணித்த உந்துருளி பேருந்து ஒன்றுடன் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது அகுனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தினை சேர்ந்த 32 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே , அனுராதபுரம் வீதி கெத்தபஹூவ பிரதேசத்தில் சிற்றூந்தில் மோதுண்டு வீதியில் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

றாகமை – மகுல்பொகுண பிரதேசத்தினை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற மற்றும் ஓர் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொஸ்கம – பூகொட வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பாரவூர்தியின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொஸ்கம பிரதேசத்தினை சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கெகிராவ – கிதுல்ஹிடியாவ பிரதேசத்தில் முச்சக்கர வண்டி மற்றும் ஜீப் ரக வாகனம் மோதுண்டதில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.

தம்புள்ளை பிரதேசத்தினை சேர்ந்த 62 வயதுடைய நபரே இவ்வாறு உயரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முச்சக்கர வண்டி ஒன்று அதி வேகம் காரணமாக வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் குறித்த விபத்து இடம்பெற்றள்ளதுடன் கொச்சிகடை பிரதேசத்தினை சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார்.

மீரிகம பிரதேசத்தில் ஜீப் ரக வாகனம் ஒன்று வீதியில் பயணித்து கொண்டிருந்த நபர் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீரிகம பிரதேசத்தினை சேர்ந்த 59 வயதுடைய நபர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்குடா – பாசிகுடா வீதியில் உந்துருளி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உந்துருளி மின் கம்பம் ஒன்றில் மோதுண்டு விபத்து நேர்ந்துள்ள நிலையில், மற்றும் ஒருவர் காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.