விடுதலை புலி தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட போது நடந்த சம்பவங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!

விடுதலைபுலிகளுக்கும் இலங்கை சிங்களபடைக்கும் நடந்த கடுமையான போர் 2009 ஆண்டு மே மாதம் இறுதிநிலைக்கு வந்தது. அப்போது கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலில் இருந்து, புலிகளின் சீருடையை அகற்றக்கோரி இலங்கை இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே உத்தரவிட்டார் என மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே இறுதிக்கட்டப் போரில் இலங்கை இராணுவ அணிகளை வழிநடத்திய தளபதிகளில் ஒருவர். அவர் இலங்கை இராணுவத்தில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் சில தகவலை கூறியுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில்
2009 மே 19ஆம் தேதி , கடுமையான துப்பாக்கிச் சண்டையின் முடிவில் பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உலகம் முழுவதும் பரப்பப்பட்டன. அப்போது புலிகளின் சீருடையில் அவரது உடல் இருந்தது.

அதனை கவனித்த சரத் பொன்சேகா மூத்த இராணுவ அதிகாரிகளை கடுமையாக சீறியுள்ளார். மேலும் சீருடையை அகற்றச் சொன்ன அவர் பிரபாகரனின் உடலில், அரைத் துணியைப் போடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

பிறகு இராணுவ முகாம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பிரபாகரனின் உடலின் இடுப்பில் அரைத்துணி அணியப்பட்டு, மீண்டும் கண்டெடுக்கப்பட்ட இடத்திலே கொண்டு வந்து போடப்பட்டு புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாகவும் பிரபாகரனின் உடலை கருணாவும், தயா மாஸ்டரும் அடையாளம் காட்டிய போது, இடுப்பில் மட்டுமே துணி போர்த்தப்பட்டிருந்தது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.