சிவனொளிபாத மலைக்கே உரித்தான பெயரை மாற்றி புத்தரின் பாதஸ்தானமாக நிலையான பெயர்க்கல் பதித்திருக்கும் செயற்பாடு அநாகரிகமானது.
அது மட்டுமன்றி கண்டிக்கத்தக்கதும் விசனத்துக்குரியதுமாகும்.
இப்பெயர் மாற்றம் உடனடியாக இரத்துச் செய்யப்பட வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் மாமன்றத்தின் பொதுச் செயலாளர் வே.கந்தசாமி விடுத்துள்ள கண்டன அறிக்கையில்,
இலங்கை வாழ் இந்துக்களுக்கு அதிர்ச்சி தரும் விடயம் சிவனொளிபாத மலையின் பெயர் மாற்றம்.
கடந்த பல ஆண்டுகளாக இந்துக்கள் மீதும் இந்து மதத்தின் மீதும் பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது நாம் அனைவரும் அவதானித்து வருகின்ற ஒரு பாரதூரமான விடயமாகும்.
சிவனொளிபாத மலை தொடர்பில் ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை உள்ளது.
அவை யாவற்றையும் இந்துக்கள் மதித்தே நடந்து வந்தனர்.
ஆனால் கடந்த 2016 இல் இப் பெயர்ப் பலகையில் காணப்பட்ட அடம்ஸ்பீக் என்ற பெயர் அழிக்கப்பட்டு ஆங்கிலத்திலும் ஸ்ரீபாத என்றே எழுதப்பட்டது.
அதன் தொடர்வினையாக இவ்வருடம் சிவனொளிபாதம் என்னும் பெயர் அழிக்கப்பட்டது.
மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகவே இந்துக்களின் நம்பிக்கை, மத சுதந்திரம் என்பன வெளிப்படையாக அழிக்கப்பட்டு கௌதம புத்தரின் பாதஸ்தானம் என்றே 3 மொழிகளிலும் பதிக்கப்பட்ட நிலையான பெயர்க்கல் அங்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த அநாகரிகமான செயலுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
இப்பெயர் மாற்றம் தொடர்பில் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹிரு செய்தி இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தியில்,
இரத்தினபுரி பிரதேச செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி சிவனொளிபாத மலையின் பெயரை கௌதம புத்தரின் ஸ்ரீபாதஸ்தானம் என மாற்றுவது தொடர்பாக எமக்கு ஒரு திட்ட முன்மொழிவு கிடைக்கப் பெற்றுள்ளது.
அது தொடர்பில் ஆராய்ந்து அரச வர்த்தமானியில் பிரசுரித்து அதன் பெயரை மாற்றுவது தொடர்பில் நாம் நடவடிக்கை எடுப்போம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது ஒரு தேசிய இனத்தின் சுதந்திரமான மத நம்பிக்கையை அவமதித்து எதேச்சாதிகாரமாக ஒரு தேசிய பொதுச் சொத்தின் மீது இப்பிரதேச செயலகம் எடுத்த முடிவையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
ஆனாலும் இதுவரையில் அப்பெயர் மாற்றம் தொடர்பில் அரச வர்த்தமானி அறிவித்தல்கள் ஏதேனும் வெளிவந்துள்ளதாக எனது புலனுக்கு எட்டியவரையில் தெரியவில்லை.
அவ்வாறதொரு அரச அறிவித்தலின்றி ஒரு தேசிய பொது உடமையை பெயர் மாற்றியிருந்தால் அவ்வாறான நடவடிக்கை சட்டவிரோதமானதே என நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
எனவே சம்பந்தப்பட்ட அனைத் துத் தரப்பினரிடமும் இப் பெயர்மாற்றம் உடனடியாக இரத்துச் செய்யப்பட்டு பழையபடி சிவனொளிபாத மலை என்று தமிழிலும் குறிப்பிடுமாறும்,
இவ்வாறான இனச் சமநிலையை சீர்குலைக்கும் நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்டவர்களை அறிந்து சட்டத்தின்படி தண்டிக்குமாறும் இலங்கை வாழ் இந்துக்களின் பிரதிநிதியாக மாமன்றம் விடுக்கும் வேண்டுகோளாகும்.
அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றால் அவை இந் நாட்டின் சமத்துவத்துக்கும் பன்மைத் தன்மைக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும் என்பதுடன்,
அரசால் மேற் கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்து வதுடன் அரசின் மீது தமிழ் மக்க ளின் நம்பிக்கையை இழக்கும் நிலை
ஏற்படும் என்பதையும் அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.