மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் பலி – ஆபத்தான நிலையில் மூவர் – மன்னாரில் சம்பவம்

மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பொருள் ஒன்று வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனை மீனவர் ஒருவர் அதனை சோதனைக்குட்படுத்திய போது குறித்த பொருள் வெடித்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

மன்னார் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் நேற்று இரவு 11.30 மணியளவில் பள்ளிமுனை கடற்கரையில் இருந்து படகு ஒன்றில் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

இதன் போது பள்ளிமுனை- நாச்சிக்குடா கடற்பகுதியில் மிதந்து வந்த மர்மப்பொருளை குறித்த மீனவர்கள் அவதானித்துள்ளனர்.

இதன் போது ஜேசு ரஞ்சித் (வயது-39) என்ற மீனவர் குறித்த மர்மப்பொருளை எடுத்து படகினுள் வைத்து சோதனைக்கு உற்படுத்திய போது குறித்த மர்மப்பொருள் வெடித்ததில் ஜேசு ரஞ்சித் மீனவர் உடல் சிதறி பலியானர்.

மேலும் குறித்த படகில் இருந்த ஏ.ஏ.சித்தி பிகிராடோ (வயது-35), எம்.அகஸ்ரின் பிகிராடோ(வயது-26) ஆகிய இரு மீனவர்களும் படுகாயமடைந்ததோடு,அந்தோனி பிகிராடோ (வயது-39) என்பவர் சிறு காயங்களுக்கு உள்ளாகினார்.

இந்த நிலையில் சடலம் உடனடியாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலதிக விசாரனைகளை மன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.