வயிற்றில் வளர்ந்தது எனது குழந்தை : கழுத்தை நெரித்தே கொலை செய்தேன் – சந்தேகநபரான இரு பிள்ளைகளின் தந்தை வாக்குமூலம்

கிளிநொச்சியில் படுகொலை செய்ப்பட்ட குடும்ப பெண்ணை கழுத்தை நெரித்தே கொன்றேன் என கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்னகீதன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குறித்த அவரது ஒப்புதல் வாக்கு மூலத்தில் குறித்த பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருந்தது எனவும் அவரது வயிற்றில் வளர்ந்த குழந்தை என்னுடையதுதான் எனவும் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

வாக்கு மூலத்தில் மேலும் குறிப்பிடுகையில் ,

தான் கர்ப்பமாக உள்ளதால் தன்னை கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தினாள் பின்னர் நாம் இருவரும் நஞ்சு குடித்து இறந்துவிடுவோம் என்று கடந்த 28ஆம் திகதி முடிவெடுத்தோம்.

அதன் பிரகாரம் அன்றைய தினம் அவள் கடமை முடிந்து தொழிற்சாலையை விட்டு வெளியில் வந்ததும் நான் எனது வீட்டில் இருந்து நடந்து வந்து அவளது மோட்டார் சைக்கிளில் அவளை ஏறிக் கொண்டு, அம்பாள் குள வீதியூடாக கிளிநொச்சி வந்து உள் பாதைகளால் கரடிப்போக்கு வந்து பின்னர் மீண்டும் உள் பாதைகளால் சம்பவ இடத்திற்கு சென்றோம்.

வரும் போதே அவள் மருந்துப் போத்தல் ஒன்றை வாங்கிவந்தாள் அங்கு சென்றதும் குடிப்போம் என்றதும் எமக்குள் சிறு பிரச்சனை வந்துவிட்டது அதன் பின்னரே அவள் பாதுகாப்பு உத்தியோகத்தரின் உடையில் வந்தமையால் அவளது கழுத்தில் அவளது தொழில் அடையாள அட்டை தொங்கிக் கொண்டிருந்தது. கழுத்தில் இருந்த பட்டியைக் கொண்டே அவளது கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்.

பின்னர் இறந்தவள் பாதுகாப்பு உத்தியோகத்தர் என அடையாளம் காணக் கூடாது என்பதற்காக அவளது பாவாடை மேற் சட்டடை எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அவளது உடலை அருகில் இருந்த வயல் கால்வாய்க்குள் இழுத்துச் சென்று போட்டுவிட்டு, மோட்டார் சைக்கிளில் வந்து கனகபுரம் பகுதியில் அவளின் பாவாடையை எறிந்துவிட்டு கைப்பை (கான்பாக்) மற்றும் மேல் சேட்டு என்பவற்றை அம்பாள் குளப்பகுதியில் எறிந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் நள்ளிரவு போல் வீட்டுக்கு வந்தேன்.

வீட்டுக்கு வந்து பின்பக்காக இருக்கும் அறையில் மோட்டார் சைக்கிள் , தலைக்கவசம் ( கேல்மற்) என்பவற்றை ஒளித்து வைத்து விட்டு மருந்துப் போத்தலைக் கொண்டுவந்தேன் குடித்து நானும் செத்துவிடுவோம் என்று முடிவெடுத்த போது, பிள்ளைகள் நினைவு வந்ததால் அதனையும் வீடுக்குள் ஒளித்துவைத்திவிட்டேன்.

சம்பவ இடத்தில் இடுப்புப்பட்டி (பெலிட்) மற்றும் சில தடயங்களைத் தவிர மற்றது எல்லாவற்றையும் நானே கொண்டு வந்தேன் இக் கொலையை நான் மட்டுமே செய்தேன் என்னால் சம்பவ இடம் மற்றும் பொருட்கள் வீசப்பட்ட இடங்கள் என எல்லாவற்றையும் அடையாளம் காட்ட முடியும் நான் தான் இதனை செய்தேன் என குறித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசாரணை.
தொலைபேசித் தரவுகள் என்பவற்றைக் கொண்டு குறித்த பெண்ணின் தொலைபேசியின் தரவை பரிசீலனை செய்த பொழுது குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் தொலைபேசியில் இருந்தே இறுதியாக அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன் தொலைபேசியில் இவருடனே அதிகளவாக தொடர்பில் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் நடைபெற்ற அன்று இரு தொலைபேசிகளும் நீண்ட நேரமாக ஒரே கோபுர அலையிலையே நகர்ந்துள்ளமை என்பவற்றைக் வைத்து நேற்று மதியம் குறித்த ஆடைத் தொழிற் சாலையில் கடமையில் இருந்த குறித்த உத்தியோகத்தரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்திய பொழுதே சந்தேக நபர் மேற்கண்டவாறு ஒப்புதல் வாக்கு மூலத்தினை வழங்கியுள்ளார்

வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவரால் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடமைகள் வீசப்பட்ட இடமான கனகபுரம் பகுதியில் இருந்து குறித்த பெண்ணின் பாவடை போன்றவற்றை மீட்ட பொலிசார் அவரது வீட்டுக் சென்று மோட்டார் சைக்கில் அவர் பாவித்த தொலைபேசி , தலைக்கவசம் , மற்றும் மருந்துப் போத்தல் என்பவற்றை மீட்டுள்ளனர்.

பின்னர் சந்தேக நபரின் மனைவியின் வாக்குமூலம் என்பன பதிவு செய்யப்பட்டு குறித்த விசாரணை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. சந்தேக நபர் கிளிநொச்சிப் பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்ட ரீதியான ஆவணங்கள் தயார் படுத்தப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப் பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.