யாழில் வலம்புரி பத்திரிக்கை எரிப்பு….

வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மினின் ஆதரவாளர்களால் யாழில்.இருந்து வெளி வரும் வலம்புரி பத்திரிகைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு பத்திரிக்கையும் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

வடமாகாண சபையின் 130 ஆவது அமர்வு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது அங்கு கருத்து தெரிவித்த அஸ்மின், ” மக்கள் ஆட்சி தத்துவத்திற்கு மாறாக இருந்தாலும், விடுதலைப்புலிகள் போல் செயற்பட வேண்டும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் சில தீர்மானங்களை அப்படியான சந்தர்ப்பங்களில் எடுத்து இருந்தார்கள். அவை மக்கள் ஆட்சிக்கு புறம்பாக இருந்தாலும் , அப்படியான தீர்மானங்கள் சில இடங்களில் தேவைபடுகின்றது.” என தெரிவித்திருந்தார்.

அது தொடர்பில் இன்றைய தினம் சனிக்கிழமை வலம்புரி பத்திரிகை “முஸ்லீம்களை வெளியேற்றிய புலிகளின் தீர்மானம் சரியானது. மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறார் அஸ்மின் ” என தலைப்பு செய்தியாக வெளியிட்டு இருந்தது.

குறித்த செய்தியினால் பெருமளவான முஸ்லீம் மக்கள் மத்தியில் மாகாண சபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிரான நிலை தோற்றம் பெற ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை யாழ்.நகரில் உள்ள ஜீம்மா பள்ளி வாசலுக்கு முன்பாக கூடிய அசஸ்மினின் ஆதரவாளர்கள் சிலர் வலம்புரி பத்திரிக்கைக்கு எதிராக கோசங்களை எழுப்பி இன்றைய பத்திரிக்கையை தீயிட்டு கொளுத்தினார்கள்.