உறங்கிக் கொணடிருந்தவருக்கு அதிர்ச்சி கொடுத்த பாம்பு! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் இளைஞரொருவர் மீது சாரைப் பாம்பொன்று விழுந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த இளைஞர் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டு கூரையிலிருந்து நன்கு பருமன் கொண்ட பெரிய பாம்பொன்று அவர் மீது விழுந்துள்ளது.இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த இளைஞர் என்ன செய்வதென்று அறியாமல் கூக்குரலிட்டுக் கொண்டு அறையிலிருந்து வெளியே ஓடியுள்ளார்.

இவரின் கூக்குரலால் வீட்டிலிருந்தவர்களும் தூக்கம் கலைந்து பயந்து எழுந்துள்ளனர். இதன்பின்னர் அவர்கள் அறைக்கு சென்று பார்த்த போது சாரைப்பாம்பொன்று எலியை அரைவாசி விழுங்கிய நிலையில் அசைய முடியாமல் கிடந்துள்ளது.

இதனையடுத்து அனைவரும் இணைந்து பாம்பை அங்கிருந்து அகற்றியுள்ளனர். இந்த நிலையில் குறித்த இளைஞர் சம்பவம் தொடர்பில் தெரிவிக்கையில்,
எமது வீட்டில் நிறைய எலிகள் உள்ளன. எனவே அவற்றை பிடிப்பதற்காக தான் சாரைப்பாம்பு கூரையினூடாக வந்திருக்க வேண்டும்.

எலியை விழுங்கும் போது அசைவதற்கு கஷ்டப்பட்டதால் தவறி விழுந்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.