ஹிமாதாசுக்கு அளிக்கப்பட்ட வித்தியாசமான தடகள ட்ராக் வரவேற்பு!

இந்திய தடகளத்தின் புதிய அடையாளமாக பார்க்கப்படும் ஹிமா தாஸ், அஸ்ஸாமைச் சேர்ந்தவர். ஜகார்த்தா ஆசியப் போட்டியில் 3 பதக்கங்கள் வென்றுள்ளார்.

4×400 தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், 400 மீட்டர் ஓட்டம் மற்றும் கலப்பு தொடர் ஓட்டத்திலும் வெள்ளிப் பதக்கங்கள் வென்றார்.

ஜகார்த்தா ஆசியப் போட்டியில்தான் முதன்முறையாக கலப்பு தொடர் ஓட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜகார்த்தா ஆசியப் போட்டியில், இந்தியக் குழு 15 தங்கப்பதக்கங்ளுடன் 69 பதக்கங்களைக் கைப்பற்றி நாடு திரும்பியது.

டெல்லியில், பிரதமர் மோடியை நேற்று சந்தித்து வாழ்த்துப்பெற்ற வீரர் – வீராங்கனைகள், அவரவர் சொந்த ஊருக்குப் பயணப்பட்டனர்.

ஹிமா தாஸ் கவுகாத்திக்கு இன்று வந்தார். அவரை வரவேற்க அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் சர்போனாந்தா ஸோனாவால் தலைமையில் பெரிய குழுவே கவுகாத்தி விமான நிலையத்தில் திரண்டிருந்தது.

அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து பெயர் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நாட்டுக்கு தடகள வீராங்கனைகள் உருவானதில்லை.

ஹிமா தாஸால் மாநிலத்துக்கே கௌரவம் தேடித் தந்திருப்பதால், மாநில முதலமைச்சரே அவரை வரவேற்க நேரடியாக விமான நிலையத்துக்கு வந்திருந்தார்.

விமான நிலையத்தில், வழக்கமாக சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படும். ஹிமா தாஸுக்கு சிவப்புக் கம்பளத்துக்கு பதிலாக தடகள ட்ராக் அமைக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, ஹிமாதாஸ் பயிற்சி எடுத்த சாருசுஜை ஸ்டேடியத்துக்கு ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டார்.

வழி நெடுகிலும் மக்கள் கூட்டமாகத் திரண்டுநின்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இரண்டு மாதங்களுக்கு முன், 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகத் தடகளத்தில் 400 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸ் தங்கம் வென்றபோது, இந்தியா முழுக்க பாப்புலர் ஆனார். உலகத் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் இவர்தான்