பார்த்தீபன் இன்னும் பசியோடு தான் இருக்கிறான் – திலீபனின் முதல்நாள் பயணம்

1987 ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ம் திகதி. இது திலீபனுடன் முதலாம் நாள்.

தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம்

காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வோக்கிடோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்ந்தோம். ஆம் அவரது தியாகப்பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக் மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் போய் ஏறினார்.

அவரது பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி. பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஜன், நான் வேறும் சிலர்.வாகனம் நல்லூர் கந்தசாமி கோவிலை நோக்கி ஓடுகிறது. பாதையின் இரு பக்கத்திலும் மாணவர்களும், பொதுமக்களும் கையசைத்து வழியனுப்புகிறார்கள். நல்லூர் கந்தசாமி கோவிலை சென்றடைந்தோம். வாகனம் நின்றது. திலீபன் உண்ணாவிரத மேடை நோக்கிச் செல்கிறார். நாங்களும் பின்னால் போய்க்கொண்டிருக்கிறோம்.

தமிழீழ தாயின் எதிர்பாராத ஆசியினை பெறுகின்றார்
தமிழீழ தாயின் எதிர்பாராத ஆசியினை பெறுகின்றார்

தமிழீழ தாயின் எதிர்பாராத ஆசியினை பெறுகின்றார்

எதிர்பாராத விதமாக அந்த நிகழ்ச்சி நடந்தது. வயதான ஓர் அம்மா. தள்ளாத சிவந்த நிற மேனி. பழுத்த தலை. ஆனால் ஒளிதவளும் கண்களில் கண்ணீர் மல்க திலீபனை மறித்து தன் கையில் சுமந்து வந்த அர்ச்சணை சரையில் இருந்து நடுங்கும் விரல்களால் திரு நீற்றை எடுத்து திலிபனின் நெற்றியில் பூசுகிறார். சுற்றியிருந்த கமராக்கள் எல்லாம் அந்த காட்சியை கிளிக் செய்தது. வீரத்திலகமிடுகிறார் அந்தத் தாய். தாயற்ற திலீபன் அந்த தாயின் பாச உணர்வில் மூழ்கிப்போனார்.

போராளி பிரசாத் இன் ஆரம்ப உரை (மேஜர் பிரசாத்)

காலை மணி 9.45 உண்ணாவிரத மேடையிலே நாற்காலியிலே திலீபனை அமர வைத்தோம். திலீபனின் அருகே நான், ராஜன், பிரசாத், சிறி ஆகியோர் அமர்ந்திருந்தோம். திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. அன்று பக்கத்திலிருந்த மேடையில் பிரசாத்தின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. திரு. நடேசன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் திலீபனின் உண்ணா விரதம் எதற்காக ஆரம்பிக்கப்படுகிறது என்பதனைபற்றி விளக்கம் அளித்தார்கள். தமிழ் மக்களினதும், தமிழர் தாயகத்தினதும் உரிமைகளை பேணும் நோக்கமாக இந்தியமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன் வைக்கப்பட்ட ஜந்து கோரிக்கைகளும் விளக்கப்பட்டன.

ஐந்து அம்ச கோரிக்கை

1) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.

2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடணடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

3) இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.

4) வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு தமி்ழ்க்கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடி கொண்டுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.

பிரசாத் அவர்களால் மேற்படி ஜந்து கோரிக்கைகளும் வாசிக்கப்பட்டன. இதே கோரிக்கையை இரண்டு தினங்களுக்கு முன்பு இந்திய உயர்ஸ்தானிகரின் கையில் நேரடியாக கிடைக்கக்கூடியதாக அனுப்பி 24 மணித்தியால அவகாசமும் விடுதலைப்புலிகளால் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 15 திகதி வரையும் தூதுவரிடமிருந்து எந்த பதில்களும் கிடைக்காத காரணத்தினால் சாகும் வரை உண்ணாவிரதமும் மறியல் போராட்டமும் நடத்துவது என தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

வாசிப்பதற்கு புத்தகங்கள் கேட்ட திலீபன்.

வாசிப்பதற்கு புத்தகங்கள் கேட்ட திலீபன்.
வாசிப்பதற்கு புத்தகங்கள் கேட்ட திலீபன்.

அதன்படிதான் இந்த தியாகச்செம்மலின் தியாகப்பயணம் ஆரம்பித்தது. பிற்பகல் 2.00 மணி இருக்கும் திலீபன் கம்பீரமாக வீற்றிருந்தார். உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்கள் முடிந்து விட்டன. இரண்டாவதுமேடையிலே நடைபெற்றுக்பொண்டிருந்த உண்ணாவிரத விளக்கக் கூட்டம் முடிவடைந்து விட்டது. படிப்பதற்கு புத்தகம் வேண்டும் என என்காதில் குசுகுசுத்தார் திலீபன். நான் ராஜனிடம் சொன்னேன்.

15 நிமிடங்களில் பல அரிய நூல்கள் மேடைக்கு வந்தன. விடுதலைப்போராட்டங்கள் பற்றி அறிவதற்கு திலீபனுக்கு ஆர்வங்கள் எப்போதும் உண்டு. பிடல் காஸ்ரோ, சேகுவரோ, கொஜுமின்,யசிர் அரபாத் போன்றவர்களின் வாழ்க்கையை பற்றிய நூல்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பார். பலஸ்தீன மக்களி்ன் வாழ்க்கையை பற்றி படிப்பதென்றால் அவருக்கு பலாச்சுழை மாதிரி பிடிக்கும். பலஸ்தீன கவிதை என்ற நூலை அவரிடம் கொடுத்தேன்.

மாணவர்கள் இளையோர்களின் உணர்ச்சி கவிதைகள்

அதை மிகவும் ஆர்வத்துடன் படிக்கத்தொடங்கினார்.மாலை ஜந்து மணிக்கு பக்கத்து மேடையில் மீண்டும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயிற்று. பாடசாலை மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு கவிதைகளை வாசிக்கத்தொடங்கினர். சுசிலா என்ற மாணவி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தனது கவிதையை வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு கட்டத்தில் அவர் அழுதேவிட்டார். “அண்ணா திலீபா இளம் வயதில் உண்ணாமல் தமிழினத்திற்காக நீ தவமிருக்கும் கோலத்தைக் காணும் தாய்க்குலத்தின் கண்களில் வடிவது செந்நீர்.” சுசிலாவின் விம்மல் திலீபனின் கவனத்தை திருப்பியது.

கவிதைத்தொகுப்பை மூடிவைத்து விட்டு கவிதை மழையில் நனைய தொடங்கினார். அவர் விழிகளில் முட்டிய நீர் தேக்கத்தை ஒருகணம் என் கண்கள் காணத்தவறவில்லை. எத்தகைய இளகிய மனம் அவருக்கு இந்த இளம் குருத்து இன்னும் எத்தனை நாட்களுக்கு ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் வாடி வதங்க போகிறது. அகிம்சை போராட்டத்திற்கே ஆணி வேராக திகழ்ந்த அண்ணல் காந்தியடிகள் கூட தன்னுடைய உண்ணா விரத போராட்டங்களை நீராகாரம் அருந்தித்தானே நடத்தினார்.

ஐரிஸ் போராட்ட வீரர் பொபிஸ் ஆன்ஸ் என்ன செய்தார்? சிறைக்குள் நீராகாரம் அருந்தித்தான் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து உயிர் நீத்தார். இந்த உண்ணாவிரதம் அரசின் தலையீட்டினால் வெற்றி பெறுமானால் அந்த வெற்றி திலிபனையே சாரும். அதுபோல் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இறுதி உண்ணாவிரதம் இருந்தே திலீபன் இறக்க நேரிட்டால் அதில் கிடைக்கும் தோல்வியும் திலீபனுக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றிதான்.

நல்லூர் ஓர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம்

உலகின் புதிய அத்தியாயம் ஒன்றின் சிருஸ்டி கர்த்தா என்ற பெருமை அவனையே சாரும். ஆனால் அதற்காக எங்கள் குல விளக்கை நாமே அணைக்க வேண்டுமா? இறைவா திலீபனை காப்பாற்றிவிடு. கூடியிருந்த மக்கள் நல்லூர் கந்தனிடம் அடிக்கடி இப்படி வேண்டிக்கொள்கிறார்கள். இதை நான் அவதானித்தேன். பழம் தமிழ் மன்னனாகிய சங்கிலியன் அரசாண்ட நல்லூர் அரச தானியிலே, தமிழ்க்கடவுள் ஆகிய குமரனின் சந்நிதியில் ஓர் இளம் புலி உண்ணாமல் துவண்டு கிடந்தது. ஒரு நல்ல முடிவு கிடைக்க வேண்டும். இல்லையேல் உலகில் நீதி செத்து விடும். எனக்குள் இப்படி எண்ணிக்கொண்டேன்.

அப்போது ஒர் மேடையில் முழங்கிக்கொண்டிருக்கிறான். திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் மட்டுமல்ல, தமிழ் மக்களின் கோரிக்கைகளும் இதுதான் இதை நிறைவேற்ற வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். அவர் தமிழீம் தாருங்கள் என்பதற்காக உண்ணாவிரதம் இருக்கவில்லையே. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜந்தே ஜந்து கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வற்புறுத்தித்தான் சாகும் உண்ணாவிரதத்தை ஆரம்பி்த்திருக்கிறார்.

தமிழீழ தேசிய தலைவர் திலீபனை பார்க்க வருகின்றார்.

இந்தக்காரணத்தாலாவது இந்திய அரசு இதை நிறைவேற்ற தவறுமானால் திலீபன் அண்ணா இறப்பது நிச்சயம். திலீபன் அண்ணா இறந்தால் ஒரு பூகம்பம் இங்கே வெடிக்கும். ஒரு புரட்சி இங்கே வெடிக்கும். இதுதான் என்னால் கூற முடியும். அவரின் பேச்சு முடிந்ததும் அங்கு கூடியிருந்த மக்கள் அப்பேச்சை வரவேற்பதுபோல் கைகளை தட்டி ஆரவாரித்தனர். அந்த ஒலி அடங்க வெகு நேரம் பிடித்தது. அன்று இரவு 11.00 மணியளவில் தலைவர் பிரபாகரன் திலீபனை பார்ப்பதற்காக மேடைக்கு வருகிறார்.

தமிழீழ தேசிய தலைவர் திலீபனை பார்க்க வருகின்றார்.
தமிழீழ தேசிய தலைவர் திலீபனை பார்க்க வருகின்றார்.

அவருடன் சொர்ணம், இம்ரான், அஜித், சங்கர், ஜொனி இப்படி பலரும் வருகின்றனர். வெகுநேரம் வரை தலைவருடன் உரையாடிக்கொண்டிருந்தார் திலீபன். யாரையும் அதிக நேரம் பேச அனுமதிக்க வேண்டாம் என்று போகும் போது என்னிடம் கூறிவிட்டுச்சென்றார் தலைவர். நீர், உணவு உட்கொள்ளாத ஒருவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால் விரைவில் களைப்படைந்து விடுவார். இதனால்தான் தலைவர் அப்படி கூறிவிட்டுச்சென்றார்.

பத்திரிகையாளர் வருகை

அன்றிரவு பத்திரிகை நிருபர்களும் பத்திரிகை துறையை சார்ந்தவர்களும் திலீபனை பார்க்க மேடைக்கு வந்திருந்தனர். முரசொலி ஆசிரியர் திருச்செல்வம், ஈழமுரசை சேர்ந்த பசீர் போன்றோருடன் திலீபன் மனம் திறந்து பேசினார். அவரை கட்டுப்படுத்த எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதிகம் பேசி உடம்பை கெடுத்துக்கொள்ள போகிறாரே என்பதால் அவரை அன்பாக கடிந்து கொண்டேன். இரவு 11.30 மணியளவில் கஸ்டப்பட்டு சிறுநீர் கழித்து விட்டு 12.00 மணியளவில் படுக்கைக்குச் சென்றார்.

முதல் நாள் முடிவு,அதிகாலை 1.30 இற்கு உறங்கினார்.

அவர் ஆழ்ந்து உறங்கத்தொடங்கியபோது நேரம் 1.30 மணி. அவரின் நாடித்துடிப்பை பிடித்து அவதானித்தேன். நாடித்துடிப்பு 88. சுவாசத்துடிப்பு 20. அவர் சுய நினைவோடு இருக்கும் போது வைத்திய பரிசோதனைக்கு அனுமதிக்க மாட்டார். தனக்கு உயிர் மீது ஆசை இல்லை என்பதால் பரிசோதனை தேவை இல்லை என்று கூறுவார். அவர் விருப்பத்திற்கு மாறாக உணவோ, நீரோ, மருத்துவமோ இறுதிவரை அளிக்கக்கூடாது என்று முதல் நாளே என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டார்.

இந்த தியாக தீபத்தி்ன் உண்ணாவிரத போராட்டத்தின் முதல்நாள் முடிவு பெற்றது.


தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் இரண்டாம் நாள் நினைவலைகள் 16/09/2014

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 27ம் ஆண்டு நினைவு தினத்தின் இரண்டாம் நாள் இன்று ஆரம்பமாகின்றது. இந்த நாளில் தியாக தீபம் அவர்கள் எந்த நோக்கங்களிற்காக தனது உயிரை உருக்கி யாழ் நல்லூர் கோவில் முன்பாக தனது உயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் தற்போதய நிலையிலும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.

அன்று இலங்கை அரசாங்கம் பாரத தேசத்தினை வைத்து தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை ஓர் சூழ்ச்சிபொறிக்குள் தள்ளியதோ அவ்வாறுதான் இந்த ஆண்டிலும் சிங்கள அரசு, இந்திய அரசினை மட்டுமன்றி சர்வதேச நாடுகளையும் தனது பயங்கரவாதம் என்ற சூழ்ச்சி திட்டத்தில் சிக்குற செய்து எமது விடுதலை போராட்டத்தினை இக்கட்டான சிக்கலிற்குள் தள்ளி விட்டிருக்கின்றது சிங்கள பெளத்த பேரினவாதம்.

இந்த நிலையில் தியாகதீபத்தின் முதல் நாள் பயணத்தில் (19987 செப்டெம்பர் 15) முக்கியமான விடயங்கள் இங்கு தரப்படுகின்றன.1987 ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 16ம் திகதி. இது திலீபனுடன் இரண்டாம் நாள். அன்று அதிகாலை 5.00 மணிக்கே திலீபன் உறக்கத்தைவிட்டு எழுந்து விட்டார். முகம் கழுவி தலைவாரிக்கொண்டார். சிறுநீர் கழித்தார் ஆனால் மலம் இன்னும் போகவில்லை. அவர் முகம் சோகமாக காணப்பட்டாலும் அதைக்காட்டிக்கொள்ளாமல் எல்லோருடனும் சிரித்து பேசிக்கொண்டிருந்தார்.

சகல தினசரி பத்திரிகைகளையும் ஒன்று விடாமல் படித்து முடித்தார். பத்து மணியளவிலே பக்கத்து மேடையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. நிகழ்ச்சிகளுக்கு தேவர் தலைமை தாங்கிக்கொண்டிருந்தார். கவிதைகளை படிப்பதற்காக இளம் சந்ததியினர் முண்டியடித்து தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டிருந்தனர். நிதர்சனம் ஒளிபரப்பாளர்களின் வீடியோ கமரா நாலா பக்கமும் சுழன்று படம்பிடித்துக் கொண்டிருந்தன.

மேடைகளில் கவிதைகள் முழங்கிக்கொண்டிருந்போது திலீபன் என் காதுக்குள் குசுகுசுத்தார். “நான் பேசப்போகிறேன் மைக்கை வேண்டி தாங்கோ வாஞ்சி அண்ண.” சாப்பிடாமல் குடிக்காமல் இருக்கிறிங்கள் களைத்து விடுவீர்கள்..என்று அவரை தடுக்க முயன்றேன். ” இரண்டு நிமிடம் மட்டும்.. நிப்பாட்டி விடுவன். ப்ளீஸ் மைக்கை வாங்கித்தாங்கோ ” என்று குரல் தளதளக்க கூறினார். அவரை பார்க்க பரிதாபமாக இருந்தது. கண்கள் குழி விழுந்து, முகம் சோர்ந்து காணப்பட்டாலும் அந்த பசுமையான சிரிப்பு மட்டும் இன்னும் மாறாமல் அப்படியே இருந்தது.

இரண்டு நிமிடத்திற்கு மேல் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் மேடையில் நின்ற தேவரிடம் மைக்கை பெற்றுக் கொடுத்தேன். திலீபன் பேசப்போவதை தேவர் ஒலிபெருக்கியில் அறிவித்ததும் மக்கள் கூட்டம் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தது. திலீபன் பேசுகிறார். ” எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மக்கள் அனைவருக்கும் வணக்கம். நின்று கொண்டு பேச முடியாத நிலையில் இருப்பதால் இருந்து பேசுகிறேன். நாளை நான் சுயநினைவுடன் இருப்பேனோ என்று தெரியாது அதனால் இன்று உங்களுடன் பேச வேண்டும் என்று விரும்பினேன். நான் எமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றோம். 650 பேர் வரையில் இன்று வரை மரணித்துள்ளோம்.

மில்லர் இறுதியாகப்போகும் போது என்னிடம் ஒரு வரி கூறினான். நான் அவனுடன் இறுதி வரை இருந்தேன். “நான் எனது தாய் நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணும்போது மகிழ்ச்சியும், திருப்தியும் அடைகிறேன். மக்கள் விடுதலை அடையும் காட்சியை என் கண்களால் காண முடியாது என்பதே ஒரே ஏக்கம் ” என்று கூறிவிட்டு வெடி மருந்து நிரப்பிய லொரியை எடுத்துச்சென்றான். இறந்த 650 பேரும் அனேகமாக எனக்கு தெரிந்துதான் மரணித்தார்கள். அதனை நான் மறக்க மாட்டேன். உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு தலைவரின் அனுமதியை கேட்டபோது அவர் கூறிய வரிகள் என் நினைவில் உள்ளன.

திலீபா நீ முன்னால் போ..நான் பின்னால் வருகிறேன் என்ற அவர்அ கூறினார். இத்தகைய ஒரு தெளிவான தலைவனை தனது உயிரை சிறிதும் மதிக்காத தலைவனை நீங்கள் பெற்று இருக்கிறீர்கள். அந்த மாபெரும் வீரனின் தலைமையில் ஒரு மக்கள் புரட்சி இங்கு வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழீழத்தினை தமிழர்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத்தரும். இதனை வானத்தில் இருந்து இறந்த மற்ற போராளிகளுடன் சேர்ந்திருந்து நானும் பார்த்து மகிழ்வேன்.

நான் மனரீதியாக ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். விடுதலைப்புலிகள் உயிரினும் மேலான சிறுவர்களை, சகோதரிகளை, தாய்மார்களை, தந்தையர்களை நினைக்கிறார்கள். உண்மையான உறுதியான இலட்சியம். அந்த இலட்சியத்தினை எமது தலைவருடன் சேர்ந்து நீங்கள் அடையுங்கள் எனது இறுதி விருப்பமும் இதுதான்.”

மிகவும் ஆறுதலாக சோர்வுடன் ஆனால் திடமுடன் பேசிய அவரின் பேச்சைக்கேட்டு மக்கள் கண்ணீர் சிந்தினர். அன்றிரவு தலைவர் வந்து திலீபனை பார்த்தார். சோர்வுடன் படுத்திருந்த திலீபனின் தலையை தனது கரங்களால் வருடினார். ஒரு தகப்பனின் அன்பையும் தாயின் பாசத்தையும் ஒன்றாக குழைத்தது போலிருந்தது அந்த வருடல். இரண்டு இமய மலைகளையும் என் கண்கள் விழுங்கிக்கொண்டிருந்தன. இரவு பனிரெண்டு மணிக்கு திலீபன் உறங்கத்தொடங்கினார்.

இந்த தியாக தீபத்தி்ன் உண்ணாவிரத போராட்டத்தின் இரண்டாம் நாள் முடிவு பெற்றது.


தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் மூன்றாம் நாள்(17-09-1987)

காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு இருந்ததைவிட இன்னும் சற்று உள்ளேபோயிருப்பது போல் தோன்றியது…… முகம் வரண்டு, காய்ந்து கிடந்தது, தலை குழம்பியிருந்தது

“பல் விளக்கி முகம் கழுவவில்லையோ?”
“இல்லை வாஞ்சியண்ணை… வேண்டாம்.”

கலைந்திருந்த தலைமயிரை நானே அவரருகில் சென்று வாரி விடுகிறேன். அவர் இன்னும் சிறுநீர் கழிக்கவில்லை. “வெளிக்குப் போகேல்லையோ?” என்று மெதுவாகக் கேட்கிறேன்.

“போகவேணும் போலதான் இருக்கு.”

“சரி கீழே இறங்கி வாருங்கோ” என்று கூறிவிட்டு, மேடையை விட்டு நானே முதலில் இறங்கி, கீழே இறங்குவதற்கு உதவி செய்ய முயன்றேன்.

“வேண்டாம் விடுங்கோ……நானே வருகின்றேன்” என்று என் கையை விலக்கிவிட்டு தானே கீழே குதிக்கின்றார்… மனதை எவ்வளவு திடமாக வைத்திருக்கின்றார் என்று எனக்குள்ளேயே ஆச்சரியப்பட்டேன்.

மறைவிடத்துக்குச் சென்ற அவர், சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமப்பட்டார்.

5 நிமிடம்……

10 நிமிடம்……

15 நிமிடம்……

20 நிமிடம்……

நிமிடங்கள் ஒடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், எதுவித பயனும் ஏற்படவில்லை. அவரைப் பார்க்க எனக்கு வருத்தமாக இருந்தது. என் கண்கள் என்னையறியாமலே கலங்குகின்றன. மேடையின் வலப்புறத்தில் ஏறி அமர்ந்த திலீபன், தூரத்தில் தெரியும் வழக்கமான ஆட்களை அழைத்து உரையாடத் தொடங்கினார். “கண்டபடி பேசினால் களைப்பு வரும்… கொஞ்சம் பேச்சைக் குறையுங்கோ…” என்று அவரைத் தடுக்க முயல்கிறேன். ஆனால், என்னால் முடியவில்லை. தனக்கே உரிய சிரிப்பை என் வார்த்தைகளுக்குப் பதிலாக்கிவிட்டுத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்.

கடைசியாக அவர் நீர் அருந்தி 45 மணித்தியாலங்கள் முடிந்து விட்டன. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் அவர் இப்படி தன்னைத்தானே வருத்தப்போகிறார்?

இப்போதே சிறுநீர் கழிக்க முடியாமல் கஷ்டப்படத் தொடங்கிவிட்டார். இன்னும் இரண்டு நாட்கள் போனால் என்னென்ன நடக்குமோ? என்று எண்ணிய நான், அவரின் காதுக்குள் குசு குசுக்கிறேன்.

“என்ன பகிடியா பண்ணுறீங்க?…… ஒரு சொட்டுத் தண்ணீரும் குடிக்கமாட்டேன் என்ற நிபந்தனையுடன்தானே இந்த உண்ணாவிரதத்தைத் தொடங்கினனான்…… பிறகு எப்படி நான் தண்ணீர் குடிக்க வேண்டுமென்ற கேட்டீங்க?”…

என்று ஆவசத்துடன் என்மீது பாய்கிறார்.

“இல்லை…… இப்பவே உங்களுக்குச் சலம் போறது நின்று போச்சு…… இனியும் நீங்கள் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் மேலும் மேலும் கஷ்டமாக இருக்குமே…… அதுக்காகத்தான் கேட்டனான்……”

என்று அசடு வழியக் கூறிவிட்டு, வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.

“இனிமேல் என்னைத் தண்ணி குடிக்கச்சொல்லிக் கேட்கவேண்டாம்…… சரியோ?…… உண்ணாவிரதம் என்றால் என்ன? …… தண்ணீர், குளுக்கோஸ், இளநீர் எல்லாமே உணவுதான்…… இந்த உணவுகளை எடுத்துக்கொண்டு எவ்வளவு நாளும் உயிர் வாழலாம். ஆனால், அது உண்ணாவிரதம் இல்லை. உண்ணாவிரதம் எண்டால் அதுக்கு அர்த்தம் வேணும்… ஒரு புனித இலட்சியம் நிறைவேற வேணுமெண்டதுக்காகத்தான் எங்களை நாங்கள் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறது…… இது வெறும் அரசியல் லாபத்துக்காக தொடங்கப்பட்டதல்ல…… வயிறு முட்டக் குடித்துவிட்டு மக்களையும் ஏமாற்ற என்னால் முடியாது.”

அவரின் பேச்சில் இருந்த உண்மைகள் எனக்கும் தெரியும். ஆனால், திலீபனின் உயிர் மிகவும் பெறுமதி மிக்கது…… அதை இப்படி வருந்த விடுவதா? என்ற ஏக்கத்தில்தான் அப்படிக் கேட்டேன். ஆனால் அவர் தன் உயர்ந்த சிந்தனையால் என் பேச்சுக்கு ஆப்பு வைத்துவிட்டார்

நேரம் செல்ல செல்ல நல்லூர் ஆலய மைதானம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. கடந்த இரு நாட்களாக ஆயிரக்கணக்காக வந்திருந்த சனக்கூட்டம், இன்று இலட்சத்தைத் தாண்- -டியிருந்தது. யாழ்ப் பாண நகரத்தில் உள்ள கல்லூரிகளிலிருந்து மாணவ – மாணவிகள் காலை 9 மணி முதல் வரிசைவரிசையாக, வெள்ளைச் சீருடையில் அணிவகுத்து வந்து மைதானத்தை நிறைக்கத் தொடங்கினர்.

திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒர் அங்கத்தவர் என்ற நினைப்பு விடுபட்டு, “தமிழ் இனத்தின் பிரதிநிதி” என்ற எண்ணம்தான் அந்தச் சனக்கூட்டத்தினர் மத்தியில் நிறைந்திருந்தது. தாய்க்குலம் – திலீபன் வாடி வதங்கியிருந்த கோலத்தைக் கண்டு கண்ணீர் சிந்தியது. அந்தக் கண்ணீர் மழையில் இதயம் கனிந்து விட்ட வருணபகவான் கூடத் தீடீரென்று பலமாகக் கண்ணீர் சொரியத் தொடங்கிவிட்டான்.

ஆம் !

அனலாகக் கொதித்துக்கொண்டிருந்த சூரியன், ஒரு பிள்ளையின் உடலை வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்காகத், தன்னைத் தானே கருமேகத்தின் போர்வைக்குள் மூடிக்கொண்டான் மழைநீர் கோவில் மைதானத்தில் ஆறாக ஒடிக்கொண்டிருந்தது. ஆனால், பொதுமக்களில் ஓருவர்கூட எழும்பால் அப்படியே இருந்தனர். அப்பப்பா! மக்களின் உணர்வு மழைக்கு முன்னிலையில் அந்த வருணனின் மழைநீர் வெகு சாதாரணமானது என்ற எண்ணம் நிதர்சனமாகத் தெரிந்தது.

வாடிய நிலையிலும், சோர்ந்த நிலையிலும் தன் உயிரினும் மேலான மக்கள் மழையில் நனைவதைக் கண்ட திலீபன், அவர்களை சனைய வேண்டாம் என்று கைகளை அசைத்துச் சைகை காட்டினார். ஆனால், அவர்களோ அசைவதாக இல்லை. “உன்னால் மட்டும் தானா தமிழினத்துக்காக மெழுகாக உருக முடியும்? …… உன் உயர்ந்த இலட்சியத்துக்கு முன் இந்த மழை வெகு சாதாரணமானது!” என்று கூறுவதுபோல், அவர்கள் நின்று கொண்டிருந்தனர்.

முரளியும் – நிரஞ்சனும், வேறு சிலரும் படங்குகளை விரித்துக் கட்டிக் கொண்டிருந்தனர்.

ஒலிபெருக்கியில் காசி ஆனந்தனின் கவிதையொன்று முழக்கமிட்டுக்கொண்டிருந்தது.

“திலீபன் அழைப்பது சாவையா? – இந்த சின்ன வயதில் இது தேவையா?” ……

மூன்றாம் நாளான இன்று இராண்டாவது மேடையில் சூடான பேச்சுக்களும், கண்ணீர்க் கவிதைகளும் முழங்கிக்கொண்டிருந்தன. பேச்சாளர்களில் ஒருவரும், எமது தீவிர ஆதரவாளருமான காங்கேசன்துறை கருணானந்தசிவம் ஆசிரியர் அவர்கள் இப்படிப் பேசினார்:

“தியாகி திலீபனின் உயிர் விலைமதிப்பற்றது. அவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மட்டும் உரியவர் அல்ல …… அவர் …… தமிழ் இனத்துக்கே சொந்தமானவர்… அப்படிப்பட்ட திலீபன் அவர்கள் ஒரு சொட்டு நீராவது அருந்தி தன் உடலைக் காப்பாற்ற வேண்டும். ஆவர் தன் பிடிவாதத்திலிருந்து இறங்கி நீர் உணவு அருந்தி எம் கவலையைப் போக்கவேண்டும்…… இது எனது வேண்டுகோள் மட்டுமல்ல: இங்கே வந்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களின் வேண்டுகோளும் இதுதான்.”

அந்தப் பேச்சைக் கேட்ட திலீபனின் முகம் வாடியதை நான் அவதானித்தேன்…… தான் பேசப்போவதாகக் கூறினார். அவரிடம் ஒலிவாங்கியைக் கொடுத்தேன்.

“இந்த மேடையில் பேசிய ஒர் அன்பர் என்னை நீர் உணவு அருந்தும்படி கூறியது என்னை அவமானப் படுத்துவது போல் இருக்கிறது…… நான் இந்த மேடையிலே நீராகாரம் எதுவும் எடுக்காமல் தான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தேன்… இறுதிவரை இந்த இலட்சியத்தில் இருந்து மாறமாட்டேன். நீங்கள் இந்தத் திலீபனை நேசிப்பது உண்மையாக இருந்தால், தயவு செய்து இனிமேல் எi;னை யாரும் நீராகாரம் அருந்தும்படி வற்புறுத்த வேண்டாம். உங்கள் திலீபனுக்கு நிறைந்த மனக்கட்டுப்பாடும் தன்னம்பிக்கையும் உண்டு…… என் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாவிட்டால் நீரே எடுக்காமல் இறப்பேனே தவிர, இந்த அற்ப உயிரைக் காப்பாற்றுவதற்காக என் இலட்சியத்திலிருந்து ஒரு போதும் பின் வாங்க மாட்டேன்.” அவர் பேசி முடித்ததும், மழை ஓய்ந்துவிட்டது.

திலீபனுடன் சேர்ந்து அவன் கோரிக்கைகள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தினமும் நல்லூர்க் கோவில் மைதானத்தில் அடையாள உண்ணாவிரதம் இருப்போர் தொகை அதிகாரித்துக் கொண்டே வந்தது.

பலர் தாமும் சாகும்வரை திலீபனைப்போல் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் உண்ணா- -விரதம் இருக்க விரும்புவதாக,எம்மிடம் வந்து கூறினர். அவர்களின் வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியாமல் திணறினோம்.

செல்வி. சிவா துரையப்பா என்ற பெண் அச்சுவேலியைச் சேர்ந்தவர்……17.09.1987 இல் திலீபனுக்கு ஆதரவாக மூன்றாவது (சிறிய) மேடை ஒன்றில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்……

அன்றிரவு திலீபன் சிறுநீர் கழிக்க முடியாமல் மிகவும் அவஸ்தைப்பட்டார். வைத்தியர் ஒருவரை அழைத்துவந்து அவரைப் பிரிசோதிக்க ஏற்பாடு செய்தோம் ஆனால், திலீபன் அதை மறுத்துவிட்டார். எந்தவித பரிசோதனையும், சிகிச்சையும் தான் இறக்கும் வரை தனக்கு அளிக்கக்கூடாதென்று உறுதியாகக் கூறிவிட்டார்.

அன்று அவர் கஷ்டப்பட்டு உறங்கும்போது நேரம் நள்ளிரவு 1.00 மணி.

அவரின் நாடித்துடிப்பு :- 11, சுவாசம் – 24.

பயணம் தொடரும்……..

நன்றி: அன்புச்செல்வன் (முகநூல்)