பால்ராஜிற்கும் கருணாவிற்குமுள்ள வித்தியாசம்: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 13

பீஷ்மர்

விடுதலைப்புலிகள் அமைப்பு முள்ளிவாய்க்காலில் முழுமையாக செயலிழந்து நாளையுடன் ஒன்பது வருடங்களாகிறது. 2009 மே மாதம் யுத்தம் முடிவிற்கு வந்தது. பல தசாப்தங்களாக அசைக்க முடியாத இராணுவ சக்தியாக விஸ்பரூபம் எடுத்திருந்த புலிகள் சடுதியான தோல்வியை சந்தித்ததற்கு பிரதான காரணங்களில் ஒன்று கருணாவின் பிளவு.

கருணாவின் பிளவு நிகழ்ந்திருக்காவிட்டால் யுத்தம் நீண்டிருக்க வாய்ப்பிருந்தது. அல்லது முடிவிற்கு வந்த காலப்பகுதி நீண்டிருக்கலாம். யுத்தம் நீண்டுகொண்டிருக்க, அதனால் நிகழ்ந்த மனிதப்பேரவலத்தை காரணம் காட்டி வெளித்தலையீடுகள் நிகழ்ந்திருக்கவும் வாய்ப்புண்டு.

கருணாவின் பிரிவால் புலிகளிற்கு ஏற்பட்ட பேரிழப்பு- ஆளணி. சிறப்பாக சண்டையிலீடபடக்கூடிய சுமார் ஐயாயிரம் போராளிகளை புலிகள் இழக்க வேண்டியதாகிவிட்டது.

அதுதவிர, கருணாகுழு என்ற துணைஇராணுவக்குழுவிற்கு எதிராகவும் போரிட வேண்டியிருந்தது. அவர்கள் இராணுவத்துடன் நெருங்கிச்செயற்பட்டு, புலிகளிற்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார்கள். கருணா பிளவு புலிகள் அமைப்பை மிகப்பலவீனப்படுத்தியதென்பதே உண்மை.

கருணா பிளவு தொடர்பாக இரண்டு தரப்பும் வெளிப்படையாக பேசவில்லை. மட்டக்களப்பு போராளிகளை அழைத்து வடக்கில் போராடுகிறார்கள், பெரும் படையணியுடன் வன்னிக்கு வந்து, சிறுகுழுவாக கிழக்கிற்கு போனபோது கருணாவின் ஆத்மா உறுத்தியதென்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்டவை. அதுபோல விடுதலைப்புலிகள் அறிவித்த பாலியல்குற்றம் உள்ளிட்ட சிலவும் விலக்கப்பட்டதற்கான உண்மைக் காரணமல்ல.

விடுதலைப்புலிகள் அமைப்பிற்குள் கருணா இராணுவ முக்கியத்துவம் மிக்கவராக எழுச்சிபெற்றார். விடுதலைப்புலிகளின் கடந்தகால வரலாற்றில், கருணா அளவில் எழுச்சிபெற்ற ஒருவர் அமைப்பின் இரண்டாம் நிலை தலைவராக நோக்கப்படுவதுண்டு.

முன்னர் மாத்தையா, சில காலம் பால்ராஜ், சொர்ணம் என நீண்ட பட்டியல் பின்னர் பொட்டம்மானில் வந்து நின்றது. பொட்டம்மான்தான் புலிகளின் இரண்டாம் நிலை தலைவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லையே தவிர, கட்டமைப்பு ரீதியில் அப்படித்தான் செயற்பட்டார்.

அதீத இராணுவ முக்கியத்துவம்மிக்கவராக எழுச்சிபெற்றபோதும், இரண்டாம் நிலை தலைவராக முடியவில்லையென்ற அதிருப்தி கருணாவிற்குள் இருந்தது. பொட்டம்மானின் இரண்டாம்நிலையை ஏற்றுக்கொள்ள முடியாததாலோ என்னவோ, பொட்டம்மானை வெட்டி ஓடத் தொடங்கினார் கருணா.

இது பொட்டம்மானையும் அதிருப்தியடைய வைத்தது. ஜெயசிக்குறு எதிர்ச்சமரிற்காக 1997இல் மட்டக்களப்பிலிருந்து ஐயாயிரம் போராளிகளுடன் கருணா வன்னிக்கு வந்திருந்தார். 1998இன் பிற்பகுதியில் பொட்டம்மான்- கருணா சுமுகமற்ற உறவு ஆரம்பித்தது. (இருவருக்குமிடையில் பல வருட மோதல் பின்னணியுண்டு. அதை இந்த தொடரின் பின்பகுதியில் விலாவாரியாக தருவோம்)

இதற்குள் ஒரு பிளாஸ்பேக் சம்பவம். கிழக்கு மகளிர்படையணியான அன்பரசி படையணியின் தளபதியாக இருந்தவர் நிலாவினி (சாளி). கருணா வன்னிக்கு வந்தபோது நிலாவினியும் வந்தார். நிலாவினியின் தனிப்பட்ட நடத்தைகள் தொடர்பான முறைப்பாடுள் அமைப்பின் தலைமைபீடத்திற்கு சென்றது. அவர் பாலியல்ரீதியான பலவீனம் உள்ளவரென்பது அந்த முறைப்பாடுகளின் சாரம். இதனையடுத்து அவரை அமைப்பிலிருந்து விலக்கிவிடுமாறு பிரபாகரன் உத்தரவிட்டார்.

ஆனால் கருணா வேறுவிதமாக செயற்பட்டார். நிலாவினியை அன்பரசி படையணி தளபதியிலிருந்து அகற்றி வேறொருவரை நியமித்துவிட்டு, ஒரு கௌரவ உறுப்பினராக நிலாவினியை செயற்பட வைத்தார். பின்னர், கிழக்கிற்கு சென்றதும், அங்கு மீளவும் நிலாவினி பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிழக்கு போராளிகள் 1996 வரை பல வருடங்களாக பிரபாகரனை காணவேயில்லை. அவர்களிற்கு கருணாதான் எல்லாமும். தவிரவும், ஜெயசிக்குறு சமயத்தில் கிழக்கு போராளிகளிடம், “நாங்கள் இல்லாவிட்டால் இயக்கத்தில் ஒன்றுமில்லை“ என்ற அபிப்பிராயம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. போராளிகள் சந்திப்புக்களில் கிழக்கு தளபதிகள் இதனை அடிக்கடிகூற, போராளிகளிற்கிடையில் இந்த எண்ணம் வலுவாகிவிட்டது. இது எதிரொலித்த சம்பவமொன்று 2000 ஆம் ஆண்டு நிகழ்ந்தது.

கிழக்கு தளபதிகள், வடக்கு தளபதிகளை அவ்வளவாக கண்டுகொள்ளாமல், கருணாவின் கட்டளையைதான் ஏற்போம் என்பதைபோல செயற்படுவதை அவதானித்த பிரபாகரன் ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்தார். களமுனைகளில் ஆங்காங்கே பதிவான சிறுசிறு சம்பவங்களின் பாரதூரதன்மையை முன்னரே ஊகித்ததால் பிரபாகரன் எடுத்த முடிவது.

வன்னியை மீட்ட ஓயாதஅலைகள் 3 நடவடிக்கையை, வேறு தளபதிகளை கொண்டு செயற்படுத்தினார். ஜெயசிக்குறு சமயத்தில் கருணா வகித்த பாத்திரத்தை, ஓயாத அலைகள் 3 இல் தீபன் வகித்தார். கருணா பின்னணியில் செயற்படுபவராக இருந்தார்.

வன்னி தெற்கில் ஒட்டுசுட்டானில் ஆரம்பித்த நடவடிக்கை, ஒருமுனையில் வவுனியாவை நெருங்க, மறுமுனையில் மணலாற்றின் மண்கிண்டிமலையை அடைந்தது. பின்னர் ஆனையிறவு, யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து ஆரம்பித்தது. யாழ்ப்பாணத்தின் வாசல்ப்படி வரை வந்த நடவடிக்கை. இதில் பால்ராஜ், தீபன், சொர்ணம் போன்றவர்கள் பிரதான பாத்திரம் வகித்தார்கள். கிழக்கு அணிகளும் களத்திலிருந்தன.

இயக்கச்சிக்கு சமீபமாக களமுனை இருந்தது. பால்ராஜ் கட்டளை தளபதி. நெருக்கடியான சமயமொன்றில் கிழக்கு அணிகளை வழிநடத்திய இரண்டாம்நிலை தளபதிகள், பால்ராஜின் கட்டளையை ஏற்க மறுத்துவிட்டனர். “எங்களுக்கு அம்மான்தான் கொமாண்ட் பண்ண வேண்டும்“ என கூறிவிட்டனர்.

இதுபின்னர் சர்ச்சையானது. களமுனைகளில் நடப்பவற்றை, பிரச்சனைகளை விசாரணை செய்ய களமுனை ஆய்வுப்பிரிவு என ஒன்றை புலிகள் உருவாக்கி வைத்திருந்தனர். தமிழ்நாட்டின் 9ம் பயிற்சிமுகாமில் பயிற்சிபெற்ற நோயல் அதன் பொறுப்பாளராக இருந்தார்.

அவர் இந்த சம்பவத்தை விசாரணை செய்து, பிரபாகரனிற்கு அறிக்கை சமர்ப்பித்தார். உடனடியாக கருணாவை அழைத்த பிரபாகரன், கடும் தொனியில் பேசியிருக்கிறார்.

இயக்கத்திற்காகவே போராளிகள் வளர்க்கப்பட வேண்டும், தனிநபர்களிற்காக அல்ல என அறிவுறுத்தி, கிழக்கு போராளிகளுடன் உடனடியாக மட்டக்களப்பிற்கு செல்லுமாறு கட்டளையிட்டார்.

சுமார் மூன்றரை வருடம் வன்னிப்போரில் முக்கிய பங்காற்றிய கிழக்கு படையணிகள் 2000 ஆம் ஆண்டு மீண்டும் கிழக்கிற்கு திரும்பின.

கிழக்கில் கருணா தனியான நிர்வாக கட்டமைப்புக்களை ஏற்படுத்தி வைத்திருந்தார். நிதி, நிர்வாகம் இரண்டும் கருணாவின் கட்டுப்பாட்டில் இருந்தன. நிர்வாக விடயங்களில் கருணா மற்றவர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் செயற்படகூடியவர். கிழக்கில் படையணிகளை பெருக்கி, முறையான கட்டமைப்பை ஏற்படுத்தினார். புதியதொழில்நுட்பங்களை உள்வாங்கி, வேலைகளை இலகுபடுத்துவதிலும் கில்லாடி. புலிகள் அமைப்பிற்குள் முதன்முறையான மின்சார பேக்கரி அமைத்தார்.

யுத்தகளத்தில் கருணாவின் கட்டளை மையங்கள் பிரமாண்டமாகவும், அதிக வசதிகளுடனும் இருக்கும். அதிக உதவியாளர்கள், மெய்ப்பாதுகாவலர்களை வைத்துக்கொள்வதும் கருணாவின் வழக்கம். ஜெயசிக்குறு களமுனையை வழிநடத்திய சமயத்திலும், அவரது கட்டளை மைய பதுங்குகுழிக்கு மின்சாரம் இருந்தது. இதற்காக சிறிய ஜெனரேட்டர்களை வைத்திருப்பார். அவரது பதுங்குகுழிகள் விஸ்தாரமாக, வசதிகளுடன் இருக்கும். உள்ளேயே தங்கியிருக்கத்தக்கவை. மின்விசிறிகளும் இருக்கும்.

தளபதி பால்ராஜின் கட்டளைமைய பதுங்குகுழியை முதல்முறையாக நேரில் பார்த்த கிழக்கு இளநிலை தளபதிகள் அதை நம்ப மறுத்த சம்பவமும் உள்ளது. பால்ராஜ் எளிமையானவர். போராளிகளுடன் முன்னணி நிலையிலும் தங்கக்கூடியவர். தனது இருப்பிடத்தை வசதியாக வைத்துக்கொள்வதையும் விரும்பாதவர். நெருக்கிக்கொண்டு உட்காரத்தக்க சிறிய பதுங்குகுழி ஒன்றிற்குள் இருந்தபடியா பால்ராஜ் கட்டளையிடுகிறார் என அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

கிழக்கிற்கு திரும்பிய கருணா, வடக்கிற்கு எதிரான மனநிலையை தனது தளபதிகளிடம் வளர்த்தார். பிரிவிற்கான விதை போடப்பட்டு, மெல்லமெல்ல அது துளிர்விடத் தொடங்கியது. சமாதானகாலத்தில் புலிகளின் நிர்வாக, நிதி கட்டமைப்புக்கள் கிழக்கிற்கும் விஸ்தரிக்கப்பட, பிரச்சனைகள் அதிகரித்தன.

கருணா பிரிவு என்பது ஒருநாளில் நடந்ததல்ல. நீண்ட பலகால முரண்களின் இறுதி முடிவு. 2001 இல் ஆரம்பித்த சின்னசின்ன முரண்பாடுகளை புலிகள் ஆரம்பத்தில் அவ்வளவாக முக்கியத்துவப்படுத்தவில்லை. அது 2004இல் உலகத்திற்கு தெரிந்தது. ஆனால் 2003 இலேயே முரண்பாடு உச்சமாகிவிட்டது. அதை இரண்டு வழிகளில் கையாள புலிகள் முயன்றார்கள். ஒன்று, பேசித்தீர்ப்பது. இரண்டு, சேர்ஜிக்கல் ஓப்ரேசன். அதாவது, படையணிகளை குழப்பாமல் கருணாவை மட்டும் வன்னிக்கு தூக்கி வருவது.

எப்படி இரண்டையும் செய்தார்கள், முடிவு என்னானது என்பது அடுத்த பாத்தில்- வரும் ஞாயிற்றுக்கிழமை!

நன்றி : தமிழ்ப்பக்கம்