தியாகி திலீபனின் நினைவுதினத்திற்கு புதிய சிக்கல்…

தியாகி திலீபனின் நினைவுதினத்தை நல்லூரில் அமைந்துள்ள நினைவிடத்தில் நினைவுகூருவதைத் தடை செய்யும் கட்டளையை வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த கோரிக்கை நேற்று முன்தினம் மாலை யாழ். நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரனிடம் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பிகளிலான வேலி மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள பந்தல், திலீபனின் உருவப்படத்தை அகற்றுவதற்கான கட்டளையை யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளருக்கு வழங்குமாறும் நீதிமன்றில் பொலிஸார் விண்ணப்பம் செய்துள்ளனர்.

யாழ்ப்பாண பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் முன்னிலையாகி இந்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிவானிடம் முன்வைத்தனர்.

பொலிஸ் அதிகாரிகளின் விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ். நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், யாழ். மாநகர சபை ஆணையாளரை எதிர்வரும் 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்யுசிங்கம் தலைமையிலான சட்டத்தரணிகள் இந்த வழக்கில் முன்னிலையாகி பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு கடும் ஆட்சேபனையை முன்வைக்கவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனும் குறித்த நினைவு தினத்தை நினைவுகூருவதற்கு உரிமையுண்டு என முன்னிலையாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.