தியாகி திலீபன் நினைவேந்தலைத் தடுக்கும் நோக்குடன் யாழ்ப்பாணப் பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து பிரயோகிக்கப்பட்ட அழுத்தத்தையடுத்தே பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன் றில் நேற்றுமுன்தினம் மாலை வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கு அமைவாக நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளரை மன்றில் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் படைகளுக்கு எதிராக அகிம்சை வழியில் உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்த தியாகி தீலிபனின் நினைவுநாள் தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
திலீபனின் நினைவுத் தூபி நல்லூரில் அமைந்துள்ளது. இந்தத் தூபி கடந்த காலங்களில் இராணுவத்தினரால் உடைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதனைச் சுற்றி யாழ்ப்பாணம் மாநகர சபை பாதுகாப்பு வேலி அமைத்துள்ளது.
திலீபனின் நினைவேந்தல் நாள் கடந்த 15ஆம் திகதி ஆரம்பமானது. நினைவுத் தூபி அலங்கரிக்கப்பட்டு அந்த இடத்தில் ஒவ்வொரு நாளும் நினைவுகூரல் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு கொழும்பிலிருந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
தியாகி திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர். அவரை நினைவு கூருகின்றனர். நல்லூரில் அமைந்துள்ள தூபியைச் சுற்றி அமைக்கப்பட்டுள் வேலி, அங்குள்ள அலங்காரங்கள் என்பவற்றை அகற்ற உத்தரவிட பொலிஸார் மன்றில் கோரிக்கை முன்வைத்தனர்.
யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர், பொறியியலாளர், மாநகர சபை பணியாளர்கள் ஆகிய பதவிகளை தமது வழக்குப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நாளைமறுதினம் செவ்வாய்க் கிழமை யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளரை மன்றில் முற்படுமாறு நீதிமன்றம் பணித்துள்ளது.