சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கட்சி!

வடக்கு மாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சி உதயமாகியுள்ளது.

நல்லூர் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இன்று நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், முதலமைச்சரின் அடுத்தகட்ட நகர்வு தொடர்பாக பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

குறிப்பாக, அவர் தலைமையில் இயங்கிவந்த தமிழ் மக்கள் பேரவை அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பாற்பட்டதென்றும், மாகாண ஆட்சிக்காலம் நிறைவடைந்த பின்னர் தமது எதிர்கால அரசியல் செயற்பாடுகள் அமையும் என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் முதல்வர் விக்கிக்கும் இடையில் அண்மைய காலமாக முரண்பாடுகள் வலுப்பெற்றிருந்தன. குறிப்பாக கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட அவர் அதற்கு முரணாக செயற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

நேற்றைய இறுதி அமர்விலும் அவர் மீது காரசாரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இன்று புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ளார்.