189 பேருடன் கடலில் விழுந்த விமானம்… உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை: வெளியான உண்மை

கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தில் இருந்து கைக்குழந்தை ஒன்று மீட்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.

இந்தோ‌‌னேசிய தலைநகர் ‌ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவிற்கு போயிங் 737 மேக்ஸ் 8 ரக பயணிகள் விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது.

லயன் ஏர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானத்தில், 178‌‌ பயணிகள்‌, ஒரு குழந்தை,‌ ‌2 பச்சிளங் குழந்தைகள், 2 விமானிகள் மற்றும் 6 பணியாளர்கள் என 189 பேர் இருந்தனர்.

இந்தோனேசிய நிதித்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 20 பேரும் விமானத்தில் பயணித்தனர். டெல்லியைச் சேர்ந்த பவ்யே சுனேஜா விமானத்தின் தலைமை விமானி‌யாக செயல்பட்டுள்ளார்.

12ஆவது நிமிடத்தில் விமானத்தின் வே‌கம் திடீரென குறைந்ததாக கூ‌றப்படுகிறது.‌ இதையடுத்து விமானத்தை உடனே ஜகார்த்தாவுக்கு திருப்பும்படி வி‌மானிக்கு அறிவுறுத்‌தப்பட்டதாக‌வும் தெரிகிறது.

இந்த நிலையில், திடீரென 13ஆவது நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை விமானம் இழந்தது.

அந்த விமானம் சுமத்ரா பகுதியில், கடலில் விழுந்து நொறுங்கியது பின்னர் தெரியவந்தது. விமானத்தின் உடைந்த பாகங்கள் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், மீட்புப் படை அப்‌பகுதிக்கு விரைந்தது.

ஜகார்த்தா, பாண்டுங், லம்பங் ஆகிய பகுதிகளில் இருந்து படகுகள், ஹெலிகொப்டர்கள், கடற்படை கப்பல்கள் தேடும் பணிக்கு அனுப்பப்பட்டன.

மீட்புக் குழுவினர் பயணிகள் சிலரது உடல்கள், ஆவணங்களை மீட்டுள்ளனர். விமானத்தின் கருப்புப் பெட்டியைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

115 அடி ஆழத்தில் விமானத்தின் முக்கிய பாகங்கள் கிடைக்கக்கூடும் என‌கூறப்படுகிறது.‌ ராணுவ வீரர்கள், மீனவர்கள் என‌ 300க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணிகளில்‌ ஈடு‌ட்டுள்ளனர்.

3 சிறப்பு கப்பல்களும் தேடு‌‌தல் வேட்டையில் இ‌‌றங்கியுள்ளன. விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழ‌ந்‌திருக்கலாம் என மீட்புப்படையி‌னர் தெரிவித்துள்ள‌ர்.

கருப்புப் பெட்டியைக் கண்டுபிடித்த பிறகே விமான விபத்திற்கான முழு விவரங்கள் ‌தெரியவரும்‌ என்றும் அதிகாரி‌கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் கைக்குழந்தை ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, அந்தக் குழந்தை விமான விபத்தில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

அதில், விமானம் கடலில் விழுவதற்கு அந்தக் குழந்தையின் அன்னை, குழந்தைக்கு உயிர்க்காக்கும் உடையை அணிவித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் தண்ணீரில் மிதந்த குழந்தை, உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தையின் அன்னை உயிரிழந்துவிட்டார் என்றும், அந்தக் குழந்தைக்காக அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் இந்தத் தகவல் உண்மையல்ல. முற்றிலும் பொய் என தெரியவந்துள்ளது. உண்மையில் அந்தக் குழந்தை விமான விபத்தில் மீட்கப்பட்டதல்ல.

அது கடந்த யூலை மாதம் இந்தோனேசியாவில் ஏற்பட்ட படகு விபத்தின் போது மீட்கப்பட்ட குழந்தை. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது பகிரப்பட்டு வருகிறது. இந்தப் புகைப்படம் 24 மணி நேரத்திற்குள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரால் பகிரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது