மஹிந்தவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த உறுப்பினர்! மகிழ்ச்சியில் ரணில்

புதிய அரசாங்கத்தில் பதவி ஏற்ற உறுப்பினர் ஒருவர் பதவி இராஜினாமா செய்து மஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மனுஷ நாணயக்கார என்பவரே இன்று பதவி இராஜினாமா செய்து கொண்டார்.

புதிய அரசாங்கத்தை சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை பின்னரே உணர்ந்து கொண்டேன் என பிரதியமைச்சர் பதவியினை இராஜினாமா செய்துள்ள மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தமது பிரதியமைச்சர் பதவியினை இராஜினாமா செய்துள்ளமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், “மகிந்த ராஜபக்சவை நீங்கள் பிரதமராக நியமித்து நாடாளுமன்ற அமர்வுகளை இடைநிறுத்தியதை தொடர்ந்து கடந்த சில நாட்கள் குழப்பம் மிகுந்தவையாக காணப்படுகின்றன.

அவ்வேளை நான் உங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன். நீங்கள் தெரிவித்ததை ஏற்றுக்கொண்டு புதிய அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக பணியாற்றும் அரசியல் முடிவையெடுத்தேன்.

உங்களின் நடவடிக்கையினால் ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகளை தெளிவுபடுத்தி சபாநாயகர் விடுத்துள்ள அறிக்கையொன்றை வாசிக்க நேர்ந்தது.

பதவிப்பிரமாணம் செய்துள்ள புதிய அரசாங்கத்தை எந்த உலகநாடும் ஏற்றுக்கொள்ளவில்லை. இது எனது ஜனநாயக மனச்சாட்சியை ஆழமாக சிந்திக்க தூண்டியுள்ளது. நான் எனது அரசியல் சகாக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தீவிர பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் பின்னர் இவ்வாறான சட்டவிரோத அரசமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளிற்கு துணைபோகக்கூடாது என்ற முடிவிற்கு வந்துள்ளேன்.

இதன் காரணமாக எனது ஜனநாயக – அரசியல் நம்பிக்கைகள் மற்றும் மனச்சாட்சியின் அடிப்படையில் நான் எனது இராஜினாமாவை சமர்ப்பிக்கின்றேன்.

2015 ஜனவரி 8 ஆம் திகதி தேர்தலில் உங்களிற்கு கிடைத்த ஆணையும் அதன் பின்னர் தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதும் அதிகார துஸ்பிரயோகங்களையும் ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் ஒழிப்பதற்கே என்பதை நான் உங்களிற்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

இன்று முதல் நான் சபாநாயகரின் நிலைப்பாட்ட ஏற்று பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவையே ஏற்பேன்“ என தெரிவித்துள்ளார்.