கிளிநொச்சி மாணவியின் தற்கொலையில் அரசியலா? மீண்டும் சர்ச்சையில் முரளிதரன்!!

அண்மையில் கிளிநொச்சியில் தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவி தொடர்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக 9 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட மாணவி தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு ஒருவரும் முன்வரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பிபிசி சிங்கள சேவையில் இடம்பெற்ற செவ்வியின் போதே இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அரசியல் தீர்வு குறித்து தமிழ் அரசியல்வாதிகள் வெளியிடும் கருத்து தொடர்பில் கருத்து வெளியிட்ட முரளிதரன், அந்த சிறுமியை அடிப்படையாக வைத்து அவ்வாறான தீர்வு அவசியமா என முரளிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய இலங்கையில் 70 வீத மக்கள் மாதம் 20000 – 25000 ரூபாய் சம்பளம் பெறும் ஏழைகளாகும். அவர்களுக்கு மூன்று வேளை உணவு பெற்றுக் கொள்வதே சிரமமாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

9 வயது மாணவி சீருடை பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். 3 பிள்ளைகள் உள்ளனர். 12 , 9 மற்றும் 7 வயதுடையவர்களாகும். தந்தையின் நாளாந்தம் வேலை செய்து 200 ரூபாய் மாத்திரமே உழைக்கிறார்.

மிகவும் சிரமத்திற்கு மத்தியில் 3 வேளை உணவு உட்கொள்கின்றார்கள். 3 பேரும் பாடசாலை செல்கின்றார்கள். மாணவியின் சீரூடை மோசமாக உள்ளது. ஆசிரியர் புதிய ஆடை அணிந்து வருமாறு அறிவுறுத்துகிறார்.

அரசாங்கத்தினால் சீருடைக்கான வவுச்சர் ஒன்று வழங்கப்படுகின்றது. அதனை எடுத்து சென்று சீரூடை தைக்கும் போது 200 மற்றும் 250 ரூபாய் செலவாகின்றது.

ஆடையை தைப்பதற்கு பணம் இல்லாமையினால் குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். அது தொடர்பில் ஆராய்ந்து தீர்வு வழங்குவதற்கு யாருமில்லை என முரளிதனர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சிங்களவர்களே ஆதிக்குடியினர் என்ற கருத்தினை வெளியிட்டு முரதரன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். தற்போது பாடசாலை மாணவியின் தற்கொலையால் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு அவசியமற்றது என்ற தொனியில் கருத்து வெளியிட்டுள்ளார்.