தென்னிலங்கை அரசியல் வரலாற்றில் மஹிந்தவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

மஹிந்த ராஜபக்ஸவின் அரசியல் வரலாற்றில் பரிதாபகரமான சந்தர்ப்பத்தை இன்று தாம் நாடாளுமன்றத்தில் கண்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

அவரிடம் ஓரளவுக்கேனும் ஒழுக்கம் எஞ்சியிருக்குமாயின், நேர்மையாக இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சினைக்கு நாட்டு மக்கள் பொறுப்புக்கூற வேண்டுமா எனவும் அனுரகுமார திசாநாயக்க கேள்வி எழுப்பினார்.

இருவரையும் ஒரு அறையில் அடைத்து கதவை பூட்ட வேண்டும். ஒன்று கடித்துக்கொண்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும் இல்லாவிட்டால், கட்டியணைத்துக் கொண்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட வர்த்தமானிக்கமையவே இன்று நாடாளுமன்றம் கூடியது. ரணில் விக்ரமசிங்க பிரதமர் என நாடாளுமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

இந்த அரசாங்கம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சரவை மீது நம்பிக்கையில்லை என்ற பிரேரணையே நேற்று நடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதற்கே நாம் ஆதரவளித்தோம் என்றும் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.