சமகாலத்தில் இலங்கையில் பல்வேறு நெருக்கடி நிலைகள் ஏற்பட்ட போதிலும், நீதிமன்ற செயற்பாடுகளில் ஜனாதிபதி தலையீடு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அடுத்து, ஜனாதிபதியின் செயற்பாடு குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்ற விடயங்களில் தலையிடுவதில்லை என்பதற்கு இதுவொரு சிறந்த உதாரணம் என ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டமை குறித்து, ஜனாதிபதி தரப்பினரிடம் தகவல் வினவிய போது ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் சுயாதீன தன்மை மற்றும் இலங்கை அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை மதித்து ஜனாதிபதி உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை என்பதனை புரிந்து கொள்வதற்கு இந்த தீர்ப்பு போதுமானதாக உள்ளதென அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னரும் தனது பதவி காலம் 5 வருடங்களா அல்லது 6 வருடங்களா என்பதனை உறுதி செய்வதற்காக ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்தின் கருத்தை கேட்டிருந்தார். இதன்போது நீதிமன்றத்தின் கருத்திற்கு தலை சாய்த்தவர் எவ்வித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.