யாழில் பிரபல பாடசாலை மாணவன் செய்த மோசமான செயல்! நீதிபதியின் கடுமையான உத்தரவு

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத கால சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று தீர்ப்பளித்தார்.

ஒரு மாத கால சிறைத் தண்டனையை அனுபவிக்க மாணவனை சான்று பெற்ற சீர்திருத்தப் பாடசாலையில் சேர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் கட்டளை வழங்கியது.

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாண நகர் பகுதியில் 18 வயதுடைய மாணவன் ஒருவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 10 மில்லிக்கிராம் உயிர்க்கொல்லி ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

அவர் யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரி ஒன்றின் மாணவன் என்று பொலிஸார் மன்றுக்குத் தெரிவித்தனர்.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றில் மாணவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதனால் அவருக்கு ஒரு மாதகால சிறைத் தண்டனையை விதித்த யாழ்ப்பாணம் நீதிவான், மாணவனை அச்சுவேலி சீர்திருத்தப் பாடசாலையில் சேர்ப்பித்து தண்டனைக் காலத்தைக கழிக்க அனுமதியளித்தார்.