நான் விட்டு செல்ல போவதில்லை! நெருக்கடியான நேரத்தில் மீள் அவதாரம் எடுக்கும் முன்னாள் ஜனாதிபதி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டுவிட்டு வேறு எந்தக் கட்சிகளுடன் யார் சென்றாலும், தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டு செல்லப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டு மக்கள் கடந்த ஜனவரி 8ஆம் திகதி தந்த ஆணையை தாரைவார்த்து விட்டு மக்களின் எதிரிகளாகவுள்ள ஒரு குழுவுடன் இணைந்து கொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை புதைப்பதற்கு எடுக்கும் முயற்சியை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 8 ஆம் திகதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஏனைய கட்சிகளும் ஒன்றிணைந்து பரிசுத்தமான நிர்வாகம் ஒன்றை உருவாக்க முயற்சித்தன.

இந்நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு குழு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்டு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இல்லாமல் செய்ய முயற்சித்து வருகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.