ரணில் தரப்பு வைத்துள்ள செக்! சிக்கலில் மகிந்த

பிரதமர் செயலகத்தை செயற்பட விடாமல் முடக்கும் புதிய நகர்வு ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்கியுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு, மகிந்த ராஜபக்சவை பிதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார்.

இதனால் கொழும்பு அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், பிரதமர் பதவிக்கு ரணில் மற்றும் மகிந்த ஆகியோர் உரிமை கோரி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமராக பதியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில், பிரதமர் செயலகத்தை செயற்பட விடாமல் முடக்கும் புதிய நகர்வு ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்கியுள்ளது.

பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை இடைநிறுத்தும் பிரேரணை ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சி இன்று நாடாளுமன்றக் குழு அறையில் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முன்வைத்துள்ளது.

இந்தப் பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, எதிர்வரும் 29ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அரச நிதி ஒதுக்கீடுகளை நாடாளுமன்றமே கட்டுப்படுத்துகின்றது.

அந்தவகையில் மகிந்த ராஜபக்சவின் செயலகம் மற்றும் பணியாளர்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை இடைநிறுத்தும் பிரேரணையை நிறைவேற்றுவதன் மூலம் தமது பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த நடவடிக்கை மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

ஐ.தே.கவின் இந்த நடவடிக்கை மஹிந்த அரசுக்குப் புதிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.