இலங்கையில் விஷ்வரூபம் எடுத்துள்ள மிளகாய் தூள் தாக்குதல்!

இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் நடத்தப்பட்ட மிளகாய்தூள் தாக்குதலை உதாரணமாக கொண்டு பல குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் நாவலப்பிட்டி – அரங்கலை பிரதேசத்தில் 17 வயது யுவதி ஒருவருக்கு மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

நாவலப்பிட்டி – அரங்கலை பிரதேசத்தில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் 17 வயது யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த காதல் விவகாரம் யுவதியின் தாயாருக்கு தெரியவந்த நிலையில், யுவதி வெளியில் சென்று வருவதற்கு உறவினர் ஒருவரின் முச்சக்கரவண்டியை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிலையில், காதலியை காணக்கிடைக்காத குறித்த இராணுவவீரர் நண்பர்களிடம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மிளகாய் தூள் தாக்குதலை காண்பித்து நாமும் இதை கடைப்பிடிப்போம் எனக் கூறியுள்ளனர்.

இதையடுத்து கடந்த 19ஆம் திகதி முச்சக்கர வண்டியில் செய்ற யுவதி மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதி மீது மிளகாய்த்தூள் கலந்த நீரை வீசி யுவதியை கடத்திச் சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தி உள்ளனர்.

இந்த சம்பவத்தில் இராணுவ வீரர் உள்ளிட்ட 3 பேரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இவர்களை 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அண்மையில் தம்புள்ளை நகரில் சுற்றிவளைப்புக்காக சென்றிருந்த பொலிஸ் அதிகாரிகள் மீதும் மிளகாய் தூள் கலந்த நீரை வீசிவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.