வீட்டில் தனித்திருந்த தாயையும், மகளையும் மிரட்டி கத்தி முனையில் பயங்கரக் கொள்ளை…. !! வடமராட்சியில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்….!!

வீடொன்றின் புகைக் கூடு வழியாக வீட்டுக்குள் உள்நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த தாய்,மகள் ஆகியோரது கழுத்தில் கத்தியை வைத்துக் கடுமையாக மிரட்டி வீட்டிலிருந்த 14 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபா பணம், துவிச்சக்கர வண்டி என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் யாழ்.உடுப்பிட்டி கட்டைப் புளியடிப் பகுதியில் நேற்று(07) அதிகாலை இடம்பெற்றுள்ளது.வீட்டுக்குள் நுழைந்த நான்கு பேர் கொண்ட திருட்டுக் கும்பல் வீட்டில் தனித்திருந்த தாயையும்,மகளையும் கத்தி முனையில் கடுமையாக மிரட்டியுள்ளதுடன், சுமார் இரு மணித்தியாலங்களுக்கு மேலாக வீடு முழுவதும் சல்லடை போட்டும் தேடியுள்ளது.

பின்னர் வீட்டிலிருந்த தங்கநகைகள், பணம் என்பவற்றைத் திருடியுள்ளனர்.திருடிய நகைகளை வீட்டிலிருந்த தாய் மற்றும் மகளிடம் காட்டிய திருடர்கள் “இவை கவரிங் நகைகளாகவிருந்தால் நீங்கள் இருவரும் உயிரோடிருக்க மாட்டீர்கள்” எனத் தெரிவித்தவாறு அவர்களைக் கடுமையாகத் தாக்கியுமுள்ளனர்.

வீட்டின் குளிர்சாதனப் பெட்டியிலிருந்த மென்பானங்களை(சோடா)எடுத்து அருந்தியதுடன் உள்ளிருந்த அப்பிள் பழங்களையும் நால்வரும் இணைந்து வெட்டிச் சாப்பிட்டுள்ளனர்.பின்னர், தாம் கொண்டு வந்த பீடியை பிடித்த பின் அங்கு இளைப்பாறி விட்டும் சென்றுள்ளனர்.