நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் செய்யும் அட்டகாசம்! பரிதாபமாக பாதிக்கப்பட்ட முதியவர்

நாட்டில் எவ்வாறான அரசியல் நெருக்கடிகள் ஏற்படும்போதும் அது சாதாரண குடிமகன் ஒருவரை எவ்விதத்திலும் பாதிக்க கூடாது என நினைப்பவர்களே உண்மையான மக்கள் பிரதிநிதிகளாக இருக்க முடியும்.

அண்மைக்காலமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிநிலை தொடரும் நிலையில், இன்றைய தினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பினை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பு அரசியல் தரப்பினரிடத்தில் எதிர்வலைகளைத் தோற்றுவித்ததோ இல்லையோ கட்சி ஆதரவாளர்களிடையேயும் சாதாரண குடிமகன்களிடையேயும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பின் பின்னர், இன்று மாலை கொழும்பு லேக் ஹவுஸ் அலுவலகத்தில் பதற்றநிலை ஏற்பட்டிருந்தது.

அரசியல் கட்சிகள் சிலவற்றின் ஆதரவாளர்கள் அங்கு முரண்பாடுகளில் ஈடுபட்டனர், இதனால் அப்பகுதியில் சில நேரம் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

கட்சி ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டில், கால் நடக்க முடியாத சாதாரண ஒரு முதியவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கலகத்திற்கும் அவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில், வீதியில் அவர் சென்று கொண்டிருக்கும் போது அவருக்கு இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.

ஊன்று கோல் கொண்டு வீதியால் நடந்து சென்றவரின் கோலினை பறித்து அங்கிருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இது முற்றிலும் மனிதாபிமானமற்ற செயல் என்பதோடு, தாம் ஆதரவளிக்கும் கட்சிக்கு விசுவாசத்தினைக் காட்டுவதாக நினைத்துக்கொண்டு ஒரு சாதாரண குடிமகனிடம் அத்துமீறி நடந்துள்ளனர் என்பது வருத்தத்திற்குரியது.

இது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் மட்டுமல்ல, இதனை கவனத்திற்கொள்பவர்கள் இதற்கெதிரான நடவடிக்கையை மேற்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றார்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.