மகிந்த பதவி விலகுவதன் எதிரொலி! நாட்டு மக்கள் எதிர்நோக்கவுள்ள சிக்கல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ள நிலையில், அவருக்கு ஆதரவான அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் சேவை புறக்கணிப்பு போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான தேசிய நல்லாட்சி அரசாங்கம் பதவியில் இருந்த போது, மருத்துவ சேவை தவிர்த்து ஏனைய விடயங்கள் தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சேவைப் புறக்கணிப்பு போராட்டங்களை நடத்தி வந்தது.

இதன் காரணமாக நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.

புதிய அரசாங்கத்தில் ராஜித சேனாரத்னவுக்கு மீண்டும் சுகாதார அமைச்சர் பதவி வழங்கப்பட்டால், அது கடும் நெருக்கடியான நிலைமைக்கு காரணமாக அமையும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

கடந்த சில வருடங்களாக ராஜித சேனாரத்னவின் கீழ் சுகாதார துறை பெரும் சீரழிவை சந்தித்ததாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் நளிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவிக்கு வந்த பின், கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் செயற்பாடுகளை காணமுடியவில்லை.

அரச மருத்துவ அதிகாரிகள், இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்திருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம், சிங்கப்பூர் உடனான உடன்படிக்கையை இரத்துச் செய்யாது என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் முன்னிலையிலேயே தெரிவித்திருந்தார்.

எனினும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அப்போது அதற்கு எந்த எதிர்ப்பையும் வெளியிடவில்லை. மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலக போவதாக அறிவித்த உடனேயே மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளது.

இதன் மூலம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இந்த தீர்மானத்தால் நாட்டு மக்கள் சிக்கலை எதிர்நோக்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.