போலியாக இராஜினாமா செய்த மஹிந்த! பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி

மஹிந்த ராஜபக்ச இன்று பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்தது ஒரு போலியான விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

காலி பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த அவ்வாறு பதவி இராஜினாமா செய்வதென்றால் அதற்கு முதலில் அவருக்கு பதவி ஒன்று இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகள் கொண்டுவரப்பட்டு அவர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன் பின்னர் நீதிமன்றத்தின் ஊடாக சென்று அவரது பதவி நிறுத்தப்பட்டது. எனினும் அங்கு சட்டவிரோதமாக எனது பதவி நிறுத்தப்பட்டுள்ளதென மனு தாக்கல் செய்தார். அங்கும் மஹிந்தவுக்கு பலன் கிடைக்கவில்லை.

தற்போது பதவி இராஜினாமா செய்கின்றார். ஆனால் எந்த பதவியில் இருந்து இராஜினாமா செய்தார் என்று தான் தெரியவில்லை என மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.