தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் தொடர்வாரா? இல்லையா? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் எந்தவொரு தரப்பும் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஐக்கிய தேசிய முன்னணியும் இணைந்து கூட்டு அரசை அமைத்தன.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அதிகூடிய ஆசனங்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
கடந்த ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி கூட்டு அரசிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விலகியது. மகிந்த ராஜபக்ச தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவரால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல், பெரும் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்க தலைமை அமைச்சராக இன்று பதவியேற்கவுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஐக்கிய தேசிய முன்னணி அரசில் இணைவதற்குப் பேச்சு நடத்தியுள்ளனர்.
ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலர் அகில விராஜ் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய முன்னணி அரசில் இணைந்தாலும் அவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கக் கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைமைக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
அதற்கு அமைவாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய முன்னணி அரசில் இணைத்துக் கொள்ளப்படாவிட்டால், சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே செல்லும்.
ஐக்கிய தேசிய முன்னணி அரசில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இணைத்துக் கொள்ளப்பட்டால், சம்பந்தன் தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் தொடருவார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.