மூன்று பிரிவுகளில் முதலிடத்தை பெற்று பெருமை தேடி தந்த ஒரே பாடசாலை மாணவர்கள்

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் 2018இற்கான க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதாக அதிபர் ரி.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அதிபர் கருத்து கூறுகையில்,

2018இற்கான க.பொ.த உயர்தரத்தில் வவுனியா மாவட்டத்தில் எமது பாடசாலை சிறந்த பெறுபேற்றினை பதிவு செய்துள்ளது.

கலை பிரிவில் ச.டிலாஜினி, வர்த்தக பிரிவில் து.யுவதீஸ்வரன், விஞ்ஞான பிரிவில் அ.உதிஸ்டிரன் ஆகியோர் முதல் நிலைகளை மாவட்ட மட்டத்தில் பெற்று எமது பாடசாலைக்கு பெருமை தேடி தந்துள்ளார்கள்.

கடந்த ஆண்டு மாவட்ட மட்டத்தில் முதல்நிலைகளை அடையாத நிலை காணப்பட்ட போதும் இந்த ஆண்டு நாம் அடைந்திருக்கின்றோம்.

மாவட்ட மட்டத்தில் முதல் 10 பேரில் உயிரியல் விஞ்ஞானத்துறையில் பிரிவில் 6 பேரையும், கணிதப் பிரிவில் 6 பேரையும், கலைப்பிரிவில் ஒருவரையும், வர்த்தகப் பிரிவில் 4 பேரையும் எமது பாடசாலை கொண்டுள்ளது.

இதனால் இந்த அடைவு மட்டம் குறித்து நாம் மகிழ்ச்சியான நிலையில் இருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.