யாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! கட்டாயமாக்கப்படும் சட்டம்

யாழ். மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள மாநகர எல்லைக்குள் சேவையில் ஈடுபடுத்தப்படும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீற்றர் பொருத்துவது கட்டாயம் என அறிவிப்பட்டிருந்தது.

இந்த நடைமுறை முழுமையாக அமுல்படுத்தப்படாத நிலையில், எதிர்வரும் 2019.01.25 – 2019.01.31 திகதி வரையான இடைப்பட்ட காலப்பகுதிக்குள் மீற்றர் பொருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த விடயம் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பில் யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”2018.12.31 இன் பின்னர் யாழ் மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள மாநகர எல்லைக்குள் சேவையில் ஈடுபடுத்தப்படும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் 2019.01.01 ஆம் திகதி தொடக்கம் மீற்றர் பொருத்தப்பட வேண்டும் என அறியத்தரப்பட்டிருந்தது. இருப்பினும் இந்நடைமுறை முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இக்கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் கீழ் பதிவுகளைக் கொண்டுள்ள மாநகர எல்லைக்குட்பட்ட முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் உரிமையாளர்களை அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்துடன் மீற்றர் பொருத்தப்பட்டுள்ளமை தொடர்பாக பொலிஸ் மற்றும் உரிய திணைக்களங்களினால் இம்மாதம் கண்காணிக்கப்பட்டு எதிர்வரும் 2019.01.25 – 2019.01.31 திகதி வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் மீற்றர் பொருத்தாத உரிமையாளர்கள் எச்சரிக்கப்படுவார்கள்.

2019.02.01 இலிருந்து கட்டாயமாக மீற்றர் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதோடு, அவ்வாறு மீற்றர் பொருத்தாத மாநகர எல்லைக்குட்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கான தரிப்பிட அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டு, தரிப்பிடம் மீளப்பெறப்படும்” என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.