மட்டக்களப்பில் இன்று பரபரப்பை ஏற்படுத்திய மரணம்!

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னக்குடா கடலில் சிறுவன் ஒருவரின் சடலம் இன்று பிற்பகல் 01.30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது

செங்கலடி குமார வேலியார் கிராமத்தை சேர்ந்த குவேந்தின் ஹரீஸ்வருத்தன் என்ற மாணவனின் சடலமென பெற்றோரால் அடையாளம் காணப்பட்டது.

செங்கலடி மத்திய கல்லூரியில் எட்டாம் ஆண்டு கல்வி கற்கும் ஹரீஸ்வருத்தன், நேற்று காலை பாடசாலை சென்று வீடு திரும்பியதும், பகலுணவை உட்கொண்டபின் தாயிடம் 100/= ரூபா பணம் பெற்று தலை முடி வெட்டி வருவதாக கூறிச்சென்றுள்ளார்.

மாலை 06.00 மணிவரைக்கும் முடிவெட்டச் சென்ற மகன் வீடு திரும்பாததால், குறித்த சலூனுக்கு சென்று தேடியபோது, முடிவெட்டி சென்றுவிட்டார் என தகவல் கிடைத்திருக்கிறது.

அதன் பின்னர் அருகாமையிலுள்ள உறவினர்கள் வீடுகளில் தேடியும் மகனை காணக் கிடைக்கவில்லை.

இரவெல்லாம் விழித்திருந்து தன் மகனின் வரவுக்காக காத்திருந்த பெற்றோருக்கு ஏமாற்றமே விடையாக கிடைத்தது.

இன்று காலை விடயத்தை ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்த பின்னர்,

குறித்த மாணவனின் நண்பர்கள் யாரென பொலிஸார் விசாரித்த போது

பெற்றோர் மகனின் மிக நெருங்கிய நண்பர்கள் இருவரது பெயரை சொன்னதும்,

குறித்த மாணவர்கள் இருவரையும் இன்று காலை பாடசாலை சென்று அதிபரின் அனுமதியுடன் சந்தித்த பொலிசார்,

மாணவர்களை விசாரித்த போதுதான் விடயம் தெரிய வந்துள்ளது.

நேற்று பிற்பகல் மாணவன் ஹரீஸ்வருத்தன் தலைமுடிவெட்டி வெளியாகியதும், நாங்கள் ஐந்து பேர் சேர்ந்து புன்னக்குடா கடலுக்கு குளிக்கச் சென்றதாகவும்,

குளித்துக் கொண்டிருக்கும் போது, ஹரீஸ்வருத்தன் நீரில் மூழ்கி விட்டதால் பயம் காரணமாக யாரிடமும் சொல்லாமல் இருந்து விட்டோம் என்று இரு மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் புன்னக்குடா கடலில் தேடுதலில் ஈடுபட்டபோது. இன்று பிற்பகல் 01.30 க்கு சடலமொன்று மிதப்பதை கண்டு, கரைக்கு கொண்டுவந்து சேர்த்தபோது மாணவன் ஹரீஸ்வருத்தனின் சடலமே என பெற்றோரால் அடையாளம் காட்டப்பட்டது.