ஆட்டம் கண்டது பிரித்தானிய அரசு! சரித்திர தோல்வியை சந்தித்தார் தெரேசா மே

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே Brexit ஒப்பந்தம் தொடர்பான வாக்கெடுப்பில் 230க்கும் மேற்பட்ட வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் Brexit ஒப்பந்தம் தொடர்பான வாக்கெடுப்பு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்றது.

இந்நிலையில், குறித்த ஒப்பந்தம் 230 மேலதிக வாக்குகளினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, இந்த வாக்கெடுப்பில் தெரேசா மே தோல்வி அடைந்தப் பின்னர் உடனடியாக அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவருவதற்கு எதிர்கட்சியான தொழிற்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தமது தோல்வியை ஏற்றுக் கொண்டு அரசாங்கம் உடனடியாக பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்று தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோபன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த தோல்வியை அடுத்து பிரித்தானிய அரசில் ஒருவித நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் எமது தமிழ்வின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.