பலரை மெய்சிலிர்க்க வைத்த வெள்ளைக்காரர்கள்!

பசுக்கள் இடபங்கள் பாதுகாக்கும் சகல சமய நிறுவனங்களின் ஏற்பாட்டில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பட்டிப் பொங்கல் விழா கடந்த புதன்கிழமை பிற்பகல் யாழ்.நகரில் சிறப்பாக இடம்பெற்றது.

யாழ்.நகரிலுள்ள கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள சத்திரத்து ஞானவைரவர் ஆலயம் முன்பாக ஆரம்பமான கோபவனி யாழ். நகரிலுள்ள முக்கிய வீதிகளுடாக மீண்டும் ஞானவைரவர் ஆலயத்தை வந்தடைந்தது. கோபவனி சத்திரத்துச் சந்தி ஞானவைரவர் ஆலயத்தை வந்தடைந்ததும் கோபூசை இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து பட்டிப் பொங்கலை ஒட்டிய சிறப்புரைகள் மற்றும் விசேட கெளரவிப்பு நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.

மிகவும் கோலாகலமாக இடம்பெற்ற இந்தப் பட்டிப் பொங்கல் விழாவில் யாழ். குடாநாட்டைச் சேர்ந்த குறைந்தளவு மக்களே கலந்து கொண்டிருந்த போதும் மேற்படி விழாவில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த வெள்ளைக்காரர்கள் சிலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாட்டாளர்களால் வழங்கப்பட்ட தூய பசுப்பாலை ஆவலுடன் வாங்கிப் பருகிய அவர்கள் வாழையிலையில் பரிமாறப்பட்ட சக்கரைப் பொங்கலையும் மிகவும் இரசித்து சுவைத்து உண்டனர்.

அத்துடன் தமக்கு வழங்கப்பட்ட பொங்கலை விழாவில் கலந்து கொண்டிருந்த மக்கள் சிலருக்கும் பகிர்ந்து வழங்கி மகிழ்ந்தமை பார்ப்போரைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

அந்நிய நாடுகளைச் சேர்ந்த வெள்ளைக்காரர்கள் சைவ சமயம், தமிழர்களுடைய கலாசாரம் என்பன மீது கொண்டிருந்த ஈடுபாட்டைப் பார்த்த விழாவில் கலந்து கொண்டிருந்த பலரும் மெய்சிலிர்த்துப் போயினர்.