இலங்கையை அதிர வைத்த கொலை! வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள முக்கியஸ்தர்

கொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொருள் கடத்தல்காரரான இம்ரான் என்பவரின் வழிநடத்தலில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த க்ரூஸ் என அழைக்கப்படும் என்டன் மைக்கல் என்பவர் இம்ரான் என்பவரின் ஆதரவாளர் என விசாணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறை உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் வியாபாரத்தின்போது ஏற்பட்ட பணப் பரிமாற்றம் தொடர்பான முரண்பாடே துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொட்டாஞ்சேனை ஜிந்துபிட்டியில் முச்சக்கரவண்டியொன்றில் பயணித்துக்கொண்டிருந்தபோது, உந்துருளியில் வந்த சிலரால் நேற்று மாலை இந்த தூப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருவதுடன், அவரது நிலை கவலைக்கிடமாக இல்லையென மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த க்ரூஸ் என்பவருக்கு எதிரான சில போதைப்பொருள் வழக்குகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வரலாற்றின் அதிக நிறையுடைய போதைப்பொருளுடன் கைதான பங்களாதேஷ் நாட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு இலங்கை வந்திருந்த பங்களாதேஷ் நாட்டு போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் இன்று நாடு திரும்பினர்.

இலங்கை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருடன் நடத்தப்பட்ட இணைந்த விசாரணைகளுக்கு பின்னர் குறித்த குழு நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பிலான அறிக்கையொன்றை அவர்கள் தயாரித்து சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய பங்களாதேஷ் நாட்டு பெண்ணை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும், அவரை அங்கிருந்து வெளியேற இடமளிக்கப்போவதில்லை என்றும் வாக்குறுதியளித்துள்ளாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.