யாழில் பிரபல கேபிள் ரீ.வி நிறுவனத்திற்கு நீதிமன்றம் வைத்த செக்!

தனியார் நிறுவனம் ஒன்றால் சட்டவிரோதமாக நடப்பட்ட கம்பங்களை அகற்றுவதற்கு யாழ்ப்பாணம்மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனல்ட் மற்றும் ஆணையாளருக்கு அதிகாரம் உண்டு என கட்டளையிட்ட யாழ்ப்பாண நீதிமன்றம் அவர்களுக்கு எதிரான குற்றவியல் வழக்கைத் தள்ளுபடி செய்தது.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உள்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் கேபிள் கம்பங்கள் நடப்பட்டன எனத் தெரிவித்து யாழ்ப்பாண மாநகர சபை முதல்வரால் அவை கடந்த வாரம் அகற்றப்பட்டன.

இது தொடர்பில் சட்டவிரோதமான முறையில் கேபிள் கம்பங்களை நட்டுவைத்த தென்னிலங்கை நிறுவனம் யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுவழங்கியது.

அந்த முறைப்பாட்டுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் கடந்த செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார். எனினும், வேலைப் பழுவைக் காரணம்காட்டி அவர் பொலிஸ் நிலையத்துக்கு சமூகமளிக்கவில்லை.

அதனால், முதல்வர் இமானுவேல் ஆனல்ட்டிடம் வாக்குமூலம் பெறுவதற்காக மறுநாள் புதன்கிழமை முதல்வர் அலுவலகத்தில் பொலிஸார் நேரில் சென்றனர்.அன்றைய தினமும் வாக்குமூலம் வழங்க மாநகர முதல்வர் மறுப்புத் தெரிவித்திருந்தார்.

அதனால், கடந்த 18ஆம் திகதி மாநகர முதல்வர் அலுவலகத்தில் வைத்து அவருடைய வாக்குமூலத்தைப் பதிவுசெய்வதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனல்ட் மற்றும் மாநகர சபைஆணையாளர் ஆகிய இருவருக்கும் எதிராக சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ்யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த 17ஆம் திகதி பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.

‘கேபிள் இணைப்பை வழங்கும் திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனம் ஒன்றினால் நல்லூர் தொடக்கம்கல்வியங்காடு வரையான பகுதியில் 30 கம்பங்கள் நடப்பட்டன. அவற்றை நடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் முறைப்படி அனுமதி பெறப்பட்டுள்ளது.

எனினும், யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும் ஆணையாளரும் இணைந்து, அந்த 30 கம்பங்களையும்அகற்றியுள்ளனர். அதனால், அந்தக் கம்பங்களை நட்ட நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட நிறுவனம் சார்பில் முறைப்பாடு வழங்கப்பட்டது. அதுதொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கு யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளருக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. ஆணையாளரால் வாக்குமூலம் வழங்கப்பட்ட போதும், மாநகர முதல்வர் வாக்குமூலம் வழங்குவதற்கு சமூகமளிக்கவில்லை. அவர் தனது வாக்குமூலத்தை பிறிதொரு நாளில் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

அதனால், குற்றஞ்சாட்டப்பட்டவர்களான யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளரை நீதிமன்றுக்குஅழைத்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்’ என்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் மன்றில் விண்ணப்பம்செய்யப்பட்டது.

பொலிஸாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மற்றும் ஆணையாளர் இருவரும் நேற்று 21ஆம் திகதி திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலையாக அழைப்புக்கட்டளை அனுப்ப உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணைக்கு வந்தது. யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனல்ட், மாநகர ஆணையாளர் ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர்.

ஆணையாளர் சார்பில் மூத்த சட்டத்தரணி ராஜரட்ணமும், முதல்வரின் சார்பில் சட்டத்தரணிகள் ஜொனி மதுரநாயகம், கணாதீபன் உள்ளிட்டவர்களும் முன்னிலையாகினர்.

‘மாநகர சபை எல்லையில் மாநகர சபையின் அனுமதி பெறப்படாமல் அமைக்கப்பட்ட கம்பங்களைஅகற்றுவதற்கு உள்ளூராட்சி சபைகள் சட்டத்தின் கீழ் முதல்வருக்கும் ஆணையாளருக்கும் அதிகாரம்உண்டு. அவர்களால் அகற்றப்பட்ட கம்பங்கள் தொடர்பில் குற்றவியல் வழக்கின் கீழ் நீதிமன்ற நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு ஏற்பாடுகள் இல்லை. எனவே இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும்’ என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மன்றுரைத்தனர்.

அதனை ஆராய்ந்த நீதிவான் ஏ.எஸ்.பி. போல், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனல்ட்மற்றும் ஆணையாளர் இருவரையும் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்து வழக்கைத் தள்ளுபடிசெய்தார்.

இதேவேளை இந்த முறைப்பாட்டை வழங்கிய நிறுவனத்தால் வலிகாம் கிழக்கு, பருத்தித்துறை நகரசபை, உள்ளிட்ட உள்ளூராட்சி சபை எல்லைகளிலும், கம்பங்கள் நடப்பட்டுள்ளன. அந்த இடங்களிலும் உள்ளூராட்சி சபைகளின் அனுமதியை அந்த நிறுவனம் பெற்றிருக்கவில்லை.

இந்தக் கட்டளையின் அடிப்படையில், ஏனைய உள்ளூராட்சி சபைகளும் அந்த நிறுவனத்தின் கம்பங்களைஅகற்ற நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.