சபரிமலை விவகாரம் – கனகதுர்காவை வீட்டை வெளியேற்றிய குடும்பத்தினர்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த கனகதுர்காவை அவரது மாமியார் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் 10 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய இருந்த தடை உச்ச நீதிமன்ற உத்தரவு மூலம் தற்போது நீங்கி உள்ளது.

இதைத்தொடர்ந்து சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு கேரளாவை சேர்ந்த கனகதுர்கா, பிந்து ஆகிய 2 இளம்பெண்கள் பொலிஸ் பாதுகாப்புடன் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இதனால் கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் இடையே கொந்தளிப்பு ஏற்பட்டு கலவரம் நடந்தது. இதைத் தொடர்ந்து கனகதுர்காவும், பிந்துவும் பொலிஸ் பாதுகாப்புடன் தலைமறைவாக வாழும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோழிக்கோட்டிலுள்ள தனது வீட்டிற்கு பிந்து திரும்பினார். அவருக்கு தற்போது ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 பொலிஸார் 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள்.

அதே சமயம் கனகதுர்கா மலப்புரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றபோது அவருக்கு அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கனகதுர்காவை அவரது மாமியார் தாக்கியதில் அவருக்கு படுகாயமடைந்ததால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது உடல் நலம் தேறியதை தொடர்ந்து கனகதுர்கா மலப்புரத்தில் உள்ள தனது வீட்டிற்கு மீண்டும் சென்றார். இம்முறை அவருடன் பொலிஸாரும் பாதுகாப்புக்கு சென்றார்கள்.

எனினும், கனகதுர்காவை வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் என அவரது கணவர், சகோதரர் மற்றும் உறவினர்கள் கூறிவிட்டனர்.

இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் கூறும்போது, “கனகதுர்கா பாவம் செய்து விட்டார். ஆச்சாரத்தை மீறி சபரிமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததன் மூலம் அங்குள்ள சடங்குகளையும் மாற்றி விட்டார்.

எனவே அவர் பொது இடத்தில் பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போது தான் அவரை ஏற்றுக்கொள்வோம்“ என தெரிவித்துள்ளனர்.

கனகதுர்காவின் சகோதரர் பரத்பூ‌ஷன் கூறும்போது,“ இந்து சமூகத்திடமும், ஐயப்ப பக்தர்களிடமும் கனகதுர்கா மன்னிப்பு கேட்கும்வரை அவரை குடும்பத்தில் சேர்க்க மாட்டோம்“ என தெரிவித்துள்ளார்.